செய்திகள்

முதல்வரை ராஜினாமா செய்ய சொல்வது தவறான செயல்- ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. பேட்டி

Published On 2018-10-14 10:21 GMT   |   Update On 2018-10-14 10:21 GMT
எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வரை ராஜினாமா செய்யச் சொல்வது வேடிக்கையாக உள்ளது என்று ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார். #edappadipalanisamy

திருப்பரங்குன்றம்:

திருப்பரங்குன்றம் தொகுதி திருநகரில் உள்ள பள்ளியில் நடைபெற்ற வாக்காளர் சேர்க்கை முகாமை அ.தி.மு.க. புறநகர் மாவட்ட செயலாளர் ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. பார்வையிட்டார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழியில் எடப்பாடி பழசாமி சிறப்பாக ஆட்சி செய்து வருகிறார். அ.தி.மு.க.வின் சிறப்பான ஆட்சியால் கவரப்பட்ட இளைஞர்கள் தமிழகமெங்கும் ஆர்வமுடன் வாக்காளர்களாக தங்களை பதிவு செய்து உள்ளனர்.

திருப்பரங்குன்றம் தொகுதியில் தற்போது அதிக அளவிலான பெண்கள், இளைஞர்கள் தங்களை வாக்காளர்களாக பதிவு செய்து வருகின்றனர். தமிழகத்திலேயே அதிகமாக வாக்காளர் இணைப்பு நடைபெற்ற பகுதி திருப்பரங்குன்றம் என புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

தமிழகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வரை ராஜினாமா செய்யச் சொல்வது வேடிக்கையாக உள்ளது. சி.பி.ஐ. குறித்து அவரது தந்தையே பலமுறை விமர்சனம் செய்துள்ளார்.

முதல்வர் மீது குற்றம் ஏதும் நிரூபிக்காத நிலையில் அவரை ராஜினாமா செய்யச் சொல்வது தவறான செயலாகும். எதிர்க் கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் அ.தி.மு.க. அரசை பற்றி தொடர்ந்து பொய் பிரசாரம் செய்து வருகிறார். அவரது பிரசாரம் மக்களிடம் எடுபடவில்லை.

இடைத்தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வின் வெற்றி உறுதி செய்யப்பட்ட ஒன்று. தமிழக மக்கள் அனைவரும் ஜெயலலிதா வழியிலான எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியை ஏற்றுக்கொண்டு அவருக்கு வாக்களிக்க தயாராகி விட்டனர்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் இளைஞரணி மாவட்ட செயலாளர் வக்கீல் ரமேஷ், எம்.ஜி.ஆர். மன்ற மாவட்ட செயலாளர் சந்திரன், ஒன்றிய செயலாளர் ராமகிருஷ்ணன், துணைச் செயலாளர் நிலையூர் முருகன், பொதுக்குழு உறுப்பினர் முத்துக்குமார், பகுதி செயலாளர் பன்னீர் செல்வம், முனியாண்டி, வட்டச் செயலாளர் பாலமுருகன், பாசறை செல்வகுமார், பலராமன் மனோகரன், ஜெயமுருகன், குமார் சசிகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். #edappadipalanisamy

Tags:    

Similar News