செய்திகள்

துணைவேந்தர் நியமனத்தில் ஊழல்: ஆதாரம் கிடைத்தவுடன் கவர்னர் நடவடிக்கை எடுப்பார்- பா.ஜ.க. இளைஞரணி தலைவர்

Published On 2018-10-13 14:51 GMT   |   Update On 2018-10-13 14:51 GMT
பல்கலைக்கழக துணை வேந்தர் நியமனத்தில் நடந்த ஊழல் குறித்து ஆதாரம் கிடைத்தவுடன் கவர்னர் நடவடிக்கை எடுப்பார் என பா.ஜ.க. இளைஞரணி தலைவர் கூறியுள்ளார்.
கரூர்:

கரூர் பாராளுமன்ற பா.ஜ.க. இளைஞரணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கரூரில் நடந்தது. கோட்ட பொறுப்பாளர் கார்த்தி தலைமை தாங்கினார். மாநில இளைஞரணி செயலாளர் கோபிநாத், மாவட்ட இளைஞரணி தலைவர் பிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் இளைஞரணி மாநில தலைவர் வினோஜ் செல்வம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் திராவிட கட்சிகள் முன்பெல்லாம் ரோடு போட சொல்லி போராட்டம் நடத்தின. இப்போது ரோடு வேண்டாம் என போராட்டம் நடத்துகிறார்கள். ஹைட்ரோகார்பன் வாயு எங்கு இருக்கிறதோ அங்குதான் எடுக்க முடியும். அதனால் விவசாயத்திற்கும், மக்களுக்கும் தீங்கு ஏற்படும் என்றால் கண்டிப்பாக மத்திய அரசு அந்த பகுதியில் திட்டத்தை செயல்படுத்தாது. நடிகர் கருணாஸ் ஜாதி மோதலை தூண்டும் விதமாக அநாகரீகமாக பேசினார். ஆனால் எச். ராஜா யாரையும் தனிப்பட்ட முறையிலோ, ஜாதிமத மோதலை ஏற்படுத்தும் விதத்திலோ பேசவில்லை.

சமூகத்தில் நடைபெறும் ஊழல், லஞ்சங்களை பார்த்து உணர்ச்சி வேகத்தில் பேசினார். அவ்வளவுதான். தற்போதைய அ.தி.மு.க. ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல் நடக்கிறது. பல்கலைக்கழக துணை வேந்தர் நியமனத்தில் ஊழல் நடந்திருக்கலாம் என கவர்னர் கூறியுள்ளார். இந்த ஊழல் எந்த ஆட்சியில் நடந்திருந்தாலும் அதற்கான ஆதாரம் கிடைத்த உடன் கவர்னர் நிச்சயம் நடவடிக்கை எடுப்பார்.
 
வருகிற பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. மீண்டும் வெற்றி பெற்று நரேந்திரமோடி மீண்டும் பிரதமர் ஆவார். தமிழகத்தில் இருந்து அதிகம் எம்.பி.க்கள் பா.ஜ.க.வுக்கு கிடைப்பார்கள். காங்கிரசாரின் பொய் பிரச்சாரம் எடுபடாது. இவ்வாறு அவர் கூறினார்.
மாவட்ட தலைவர் முருகானந்தம், நகர தலைவர் செல்வம், மாவடட பொதுச்செயலாளர் சிவம் சக்திவேல், ஓ.பி.சி. அணி மாவட்ட தலைவர் எம்.கே. கணேசமூர்த்தி மற்றும் திரளான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். #tamilnews
Tags:    

Similar News