செய்திகள்

பெரம்பலூர் அருகே கோவில் திருவிழாவில் இரு தரப்பினர் மோதல்- 144 தடை

Published On 2018-09-29 10:55 IST   |   Update On 2018-09-29 10:55:00 IST
பெரம்பலூர் அருகே கோவில் திருவிழாவில் இரு தரப்பினர் இடையேயான மோதலை தடுக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. #144Ban
வேப்பந்தட்டை:

பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூரில் உள்ள லட்சுமி நாராயண பெருமாள் கோவில் வளாகத்தில் ராயப்பர், செல்லியம்மன், மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் 3 நாட்கள் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. விழாவின் போது சுவாமி வீதி உலா நடைபெறும். அப்பகுதியை சேர்ந்த ஒரு தரப்பினர் தங்கள் பகுதியில் வீதி உலா நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதனால் விழாவின் போது இரு தரப்பினரிடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்தது.

இந்தநிலையில் இந்த ஆண்டு இன்று முதல் 3 நாட்கள் திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால் போலீசார் தரப்பில் இன்று ஒருநாள் மட்டும் விழா நடத்தி கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது. இருப்பினும் 3 நாட்கள் நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என்று கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்து முன்னணியினர் மற்றும் பக்தர்கள் சிலர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் போலீசார் அனுமதி அளிக்கவில்லை. இதனால் தடையை மீறி 3 நாட்கள் விழாவை நடத்த பொதுமக்கள் முடிவு செய்தனர்.

இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் நிலை உருவாகியதோடு, இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை நிலவியது. இதைத்தொடர்ந்து வி.களத்தூர் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட எஸ்.பி. திஷாமித்தல் உத்தரவிட்டார். வருகிற 4-ந்தேதி வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும். இதையடுத்து அப்பகுதியில் 500க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அசம்பாவித சம்பவங்களை தடுக்க அதிரடி படை போலீசாரும் குவிக்கப்பட்டு ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். 144 தடை உத்தரவு நடைமுறைகளை பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. #144Ban
Tags:    

Similar News