செய்திகள்

தஞ்சையில் மகனின் தலையில் கிரைண்டர் கல்லை போட்டு கொன்ற தந்தை

Published On 2018-09-28 10:25 GMT   |   Update On 2018-09-28 10:25 GMT
பல பெண்களுடன் தொடர்பு வைத்திருந்ததை தட்டி கேட்ட மகனை தந்தையே கொலை செய்தார். தூங்கிக் கொண்டிருந்த போது தலையில் கிரைண்டர் கல்லை போட்டு கொடூரமாக கொலை செய்து விட்டு தப்பி ஓடி விட்டார்.

தஞ்சாவூர்:

தஞ்சையில் இன்று காலை நடந்த பரபரப்பான இந்த கொலை சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

தஞ்சை அண்ணாநகர் 13-வது தெருவில் வசித்து வருபவர் முகமது ஜாகீர் (வயது 52). இவர் மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது மகன் அப்துல் ரகுமான் (22).

அப்துல் ரகுமான், ஈரோட்டில் தங்கியிருந்து மருத்துவ விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை.

இந்த நிலையில் முகமது ஜாகீருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்து வந்தது. இதனால் அடிக்கடி கடையை பூட்டி விட்டு சென்னை உள்பட பல இடங்களுக்கு சென்று வருவாராம். இதை அவரது மனைவி தட்டி கேட்டார். இதனால் ஆத்திரத்தில் முகமது ஜாகீர் , மனைவியை தாக்கியுள்ளார். இதையடுத்து அவர், ஈரோட்டுக்கு சென்று மகன் அப்துல் ரகுமானுடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் அப்துல் ரகுமான், கடந்த 2 நாட்களுக்கு முன்பு விடுமுறை எடுத்துக்கொண்டு தஞ்சையில் உள்ள தந்தை வீட்டுக்கு வந்தார்.

அவர் தந்தை முகமது ஜாகீர், பல பெண்களுடன் பழக்கம் வைத்துள்ளதை கண்டித்து சத்தம் போட்டார். மேலும் தாயுடன் சேர்ந்து வாழும்படியும் கூறினார். இதுதொடர்பாக தந்தை- மகனுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இதேபோல் நேற்று இரவும் தகராறு நடந்தது. பிறகு அப்துல் ரகுமான் வீட்டில் படுத்து தூங்கி விட்டார். இந்த நிலையில் இன்று அதிகாலை எழுந்த முகமது ஜாகீர், தூங்கி கொண்டிருந்த மகன் அப்துல் ரகுமானை பார்த்து கடும் ஆத்திரம் அடைந்தார்.

உடனே வீட்டில் இருந்த கிரைண்டர் கல்லை தூக்கி அப்துல் ரகுமான் தலையில் போட்டார். இதில் தலையில் பலத்த காயம் அடைநத அப்துல் ரகுமான் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

மகன் துடிதுடித்து இறந்ததை பார்த்த பிறகு முகமது ஜாகீர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

இந்த நிலையில் அக்கம் பக்கத்தினர் வீடு நீண்டநேரமாக திறக்காமல் இருப்பதை பார்த்து சந்தேகம் அடைந்தனர். இதனால் கதவை திறந்து பார்த்த போது கட்டில் அருகே ரத்தவெள்ளத்தில் அப்துல் ரகுமான் பிணமாக கிடப்பதையும், அருகில் கிரைண்டர் கல் இருந்ததையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இதுபற்றி தஞ்சை மேற்கு போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், டி.எஸ்.பி. ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

அப்துல் ரகுமான் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்து வரும் முகமது ஜாகீரை போலீசார் தேடி வருகிறார்கள்.

பெற்ற மகனையே தந்தை கிரைண்டர் கல்லை போட்டு கொன்ற சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News