செய்திகள்
பார்வதி

கள்ளக்காதலன் மயக்க மருத்து கொடுத்து கற்பழித்தார்- தீக்குளித்து பலியான பெண் மரண வாக்குமூலம்

Published On 2018-09-21 07:18 GMT   |   Update On 2018-09-21 07:18 GMT
பணம் மோசடி குறித்து நடவடிக்கை எடுக்காததால் போலீஸ் நிலையம் முன்பு தீக்குளித்த பெண், கள்ளக்காதலன் மயக்க மருத்து கொடுத்து கற்பழித்ததாக மரண வாக்குமூலம் அளித்துள்ளார்.
குமாரபாளையம்:

கோவை பீளமேடு பகுதியில் ஜவுளிக்கடை நடத்தி வருபவர் சேகர். இவரது மனைவி பார்வதி. இவர்களிடம் குமாரபாளையத்தை சேர்ந்த ஈஸ்வரன் கார் டிரைவராக வேலைப் பார்த்து வந்தார்.

அப்போது பார்வதிக்கும், கார் டிரைவர் ஈஸ்வரனுக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது. இதை அறிந்த சேகர் மனைவியிடம் தகராறு செய்து பிரிந்து சென்றுவிட்டார்.

இதனால் பார்வதி கோவையில் உள்ள சொத்துக்களை விற்றுவிட்டு நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சடையம்பாளையம் காந்தி நகரில் வாடகை வீட்டில் குடியேறினார். அங்கும் இருவரின் கள்ளக்காதல் தொடர்ந்தது.

அப்போது பார்வதியிடம் இருந்து ரூ.1 கோடியே 30 லட்சம் பணத்தை ஈஸ்வரன் வாங்கினார். பின்னர் அவர் வீட்டுக்கு வராததால் பார்வதி பணத்தை திருப்பி கேட்டார். அவர் தர மறுத்ததால் குமாரபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். ஆனால் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் பார்வதி குமாரபாளையம் போலீஸ் நிலையம் முன்பு தான் கொடுத்த புகாரின் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி மண்எண்ணை ஊற்றி தீக்குளித்தார். இதை பார்த்த போலீசார் அவர் மேல் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர்.


பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார்.

முன்னதாக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த பார்வதியிடம், ஈரோடு 2-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு, மரண வாக்குமூலம் பெற்றார்.

ஈஸ்வரன், எங்கள் வீட்டுக்கு காரில் மாற்று டிரைவர் பணிக்கு வந்த போது அறிமுகம் ஆனார். முதலில் சகஜமாக பழகிய அவர், ஒரு கட்டத்தில் மயக்க மருந்தை கொடுத்து என்னை கற்பழித்து விட்டார். பின்னர் அவர் என்னுடன் நெருக்கமாக இருப்பது போன்று வீடியோ எடுத்துக்கொண்டு என்னை மிரட்டி பணம் பறித்தார்.

இதனால் எனது கணவர் பிரிந்து சென்ற நிலையில், எனது சொத்துகளை விற்க வைத்து அதில் ரூ.1 கோடியே 30 லட்சத்தை ஈஸ்வரன் வாங்கி கொண்டார். அதை கேட்ட போது அவர் தரமறுத்து விட்டதுடன், என்னுடன் பேச மறுத்து விட்டார். இதனால் இழந்த எனது பணத்தை திரும்ப பெறுவதற்காக குமாரபாளையம் போலீசில் புகார் செய்தேன். அவர்கள் வழக்கு மட்டும் பதிவு செய்து விட்டு விசாரணை நடத்தவில்லை.

அதே நேரத்தில் ஈஸ்வரனும், அவருடைய மனைவி மலர்க்கொடி, ஈஸ்வரனின் அண்ணன் ஜம்பு மற்றும் நண்பர்கள் 2 பேர் என்னை எவ்வாறு புகார் கொடுக்கலாம் என்று மிரட்டியதால் வேறு வழியின்றி நான் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ள முடிவு எடுத்தேன். எனது இந்த நிலைக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தனது வாக்குமூலத்தில் கூறி இருந்தார்.

இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில், ஈஸ்வரன், அவருடைய மனைவி மலர்க்கொடி, ஈஸ்வரனின் அண்ணன் ஜம்பு மற்றும் நண்பர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக கள்ளக்காதலன் ஈஸ்வரனை போலீசார் பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மற்றவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

போலீஸ் நிலையம் முன்பு பெண் குளித்த சம்பவம் குமாரபாளையம் பகுதியில் பெரும் பரபரப்பபை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News