ஒட்டன்சத்திரம் அருகே வாக்கு பெட்டிக்குள் மை ஊற்றியதால் கூட்டுறவு சங்க தேர்தல் ரத்து
ஒட்டன்சத்திரம்:
ஒட்டன்சத்திரம் அருகே ஓடைப்பட்டி கிராமத்தில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் உள்ளது. இந்த சங்கத்தின் தலைவர், துணை தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற்றது.
மொத்தம் 70 பேர் வாக்களிக்க இருந்த நிலையில் 69 நபராக ஓடைப்பட்டி வெங்கடாபுரத்தை சேர்ந்த சுப்பிரமணி என்பவர் வாக்களிக்க வந்தார்.
அப்போது திடீரென வாக்கு பெட்டிக்குள் மையை ஊற்றினார். இதனால் அதிர்ச்சி அடைந்த தேர்தல் அதிகாரி சுப்பிரமணியை பிடித்து விசாரணை நடத்தினர்.
மேலும் இது குறித்து அம்பிளிக்கை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து சுப்பிரமணியை கைது செய்தனர். 68 பேர் வாக்களித்த நிலையில் திடீரென மை வீசப்பட்டதால் அப்பகுதி பரபரப்பு ஏற்பட்டது. எனவே இந்த தேர்தல் ரத்து செய்யப்படுவதாகவும், மற்றொரு நாள் நடைபெறும் எனவும் தேர்தல் அதிகாரி தெரிவித்தார். #CooperativeElection