கடலாடி அருகே தம்பதி கொலை- மகன் உறவினர்களிடம் விசாரணை
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் கடலாடி குன்னத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன் (58), விவசாயி. இவரது மனைவி வள்ளியம்மாள் (52). இவர்களது மகன்வெங்கடேசன், மகள் சுகுணா ஆகியோர் திருப்பூரில் வசித்து வருகின்றனர்.
கண்ணனுக்கு குன்னத்தூரில் சொந்தமாக 2 ஏக்கர் நிலம் உள்ளது. இதில் பயிர் செய்ய அவரும், அவரது மனைவியும் நிலத்திலேயே வீடு கட்டி தங்கியிருந்தனர்.
நேற்று முன்தினம் காலை கண்ணனும், வள்ளியம்மாளும் வீட்டின் அருகே உள்ள கிணற்றில் பிணமாக கிடந்தனர். அவர்களை கொன்று மர்ம கும்பல் கிணற்றில் வீசி சென்றனர்.
இந்த இரட்டை கொலை குறித்து கடலாடி போலீசார் வழக்குப்பதிந்து, அடிக்கடி வீட்டுக்கு வந்து செல்லும் பக்கத்து நில விவசாயி பாபு மற்றும் அப்பகுதி மக்கள், உறவினர்கள் என 100-க்கும் மேற்பட்டோரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், கொடூர கொலையாளிகளை பிடிக்க ஏ.டி.எஸ்.பி. வனிதா மேற்பார்வையில், டி.எஸ்.பி.க்கள் அண்ணாதுரை, சின்னராஜ், குணசேகரன் ஆகியோரது தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை முடுக்கிவிடப்பட்டு உள்ளது.
இதுவரை எந்த துப்பும் துலங்கவில்லை. இவர்களுக்கு முன்விரோதியும் இல்லை தம்பதியரின் மகன் வெங்கடேசன் மற்றும் உறவினர்களிடம் வேறு ஏதாவது பிரச்சினை உள்ளதா என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.