செய்திகள்
வீராணம் ஏரி நிரம்பி கடல்போல் காட்சி அளிக்கிறது.

வீராணம் ஏரியிலிருந்து இன்று விவசாயத்துக்கு கூடுதலாக 76 கன அடி தண்ணீர் திறப்பு

Published On 2018-08-29 04:42 GMT   |   Update On 2018-08-29 04:42 GMT
விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று வீராணம் ஏரியில் இருந்து கடந்த 26-ந் தேதி முதல் தண்ணீர் திறக்கப்பட்டது. நேற்று ஏரியில் வினாடிக்கு 400 கனஅடி தண்ணீர் விவசாயத்துக்கு திறந்து விடப்பட்டது. இன்று 476 கனஅடி தண்ணீர் அனுப்பப்பட்டது. #VeeranamLake
ஸ்ரீமுஷ்ணம்:

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த நீர்மட்டம் 47.50 அடியாகும். கடலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரியாக வீராணம் ஏரி விளங்குகிறது. இந்த ஏரி மூலம் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இது மட்டுமில்லாமல் சென்னை மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் விளங்குகிறது.

கர்நாடகா மாநிலத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் அங்குள்ள அணைகளில் இருந்து காவிரி உபரிநீர் தமிழகத்தின் மேட்டூர் அணைக்கு திறந்து விடப்பட்டது. அங்கிருந்து திறக்கப்பட்ட தண்ணீர் கல்லணை வழியாக கீழணைக்கு வந்தது.

பின்னர் வடவாறு வழியாக கடந்த மாதம் 27-ந் தேதி முதல் வீராணம் ஏரிக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. கீழணையில் இருந்து வீராணம் ஏரிக்கு நேற்று 1400 கனஅடி தண்ணீர் வந்தது. இன்று 1350 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இது நேற்றைய அளவை விட 50 கன அடி குறைவாகும். நேற்று ஏரியின் நீர்மட்டம் 47 அடியாக இருந்தது. இன்றும் ஏரியின் நீர்மட்டம் அதே அளவு உள்ளது. தற்போது ஏரி நிரம்பி கடல்போல் காட்சி அளிக்கிறது.

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று வீராணம் ஏரியில் இருந்து கடந்த 26-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. தொடர்ந்து விவசாயத்துக்கு தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது. நேற்று ஏரியில் இருந்து 34 மதகுகள் வழியாக வினாடிக்கு 400 கனஅடி தண்ணீர் விவசாயத்துக்கு திறந்து விடப்பட்டது. இன்று 476 கனஅடி தண்ணீர் அனுப்பப்பட்டது. இது நேற்றைய அளவை விட 76 கன அடி அதிகமாகும். விவசாய பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டதால் கடலூர் மாவட்டத்தில் உள்ள 44 ஆயிரத்து 856 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

வீராணம் ஏரியில் இருந்து சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக தண்ணீர் அனுப்பப்படுகிறது. நேற்று 74 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இன்றும் அந்த அளவு 74 கனஅடி தண்ணீர் தொடர்ந்து அனுப்பப்பட்டது. #VeeranamLake
Tags:    

Similar News