தொழில் அதிபரிடம் ரூ.33 ஆயிரம் லஞ்சம் வாங்கிய அதிகாரி கைது
அம்பத்தூர்:
வேளச்சேரியை அடுத்த கீழ்கட்டளை எஸ்.ஆர். வி.எஸ். காலனியை சேர்ந்தவர் சுனில்குமார். தொழில் அதிபர்.
இவர், மரம் அறுக்கும் தொழிற்சாலைக்காக ரூ.20 லட்சம் மதிப்புள்ள நவீன எநதிரம் வாங்க ஏற்பாடு செய்து இருந்தார். மாவட்ட தொழில் மையம் மூலம் இந்த எந்திரத்தை வாங்கினால் ரூ.2 லட்சம் மானியம் கிடைக்கும்.
எனவே மானியம் பெறுவதற்காக சுனில்குமார், காஞ்சீபுரம் மாவட்ட தொழில் மையத்தில் மனுதாக்கல் செய்தார். தொழில் மைய உதவி இயக்குனர் அருள் இதுகுறித்து விசாரணை செய்தார்.
அப்போது, தனக்கு ரூ.33 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் ரூ.2 லட்சம் மானியம் பெறுவதற்கான உத்தரவை வழங்குவதாக கூறியுள்ளார். இதுகுறித்து சுனில்குமார் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.
அவர்களுடைய ஆலோசனைப்படி, மாவட்ட தொழில் மைய உதவி இயக்குனர் அருள் குடியிருக்கும் அம்பத்தூர் வெங்கடாபுரத்திற்கு சுனில்குமார் சென்றார். பணம் தருவதாக கூறி அவரை அழைத்தார்.
அருகில் உள்ள ஆட்டோ ஸ்டாண்ட் அருகே அருள் வந்தார். அவரிடம் சுனில் குமார் ரசாயனம் தடவிய 33 ஆயிரம் ரூபாயை கொடுத்தார்.
அப்போது அங்கு ஆட்டோவில் பதுங்கி இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் சுற்றி வளைத்தனர். இதையடுத்து லஞ்ச பணத்துடன் தொழில் மைய உதவி இயக்குனர் அருள் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.