செய்திகள்
திருப்பதி

திருப்பத்தூர் அருகே ஆந்திராவிற்கு செம்மரம் வெட்ட செல்ல பதுங்கி இருந்த 13 பேர் கைது

Published On 2018-08-25 10:32 IST   |   Update On 2018-08-25 10:32:00 IST
திருப்பத்தூர் அருகே திருப்பதிக்கு செம்மரம் வெட்ட செல்ல பதுங்கி இருந்த 13 பேரை போலீசார் கைது செய்தனர். #RedSandalwood
திருப்பத்தூர்:

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா பொம்மிகுப்பத்தை சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவர் சொந்தமாக பொக்லைன் எந்திரம் வைத்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் காவிரிகொட்டாய், ஆண்டியூரை சேர்ந்த திருப்பதி (வயது 23) என்பவர் கோவிந்தசாமியிடம் கடந்த 6 மாதமாக பொக்லைன் எந்திரத்தின் டிரைவராக வேலை செய்து வந்தார்.

ஆந்திர மாநிலத்துக்கு பொக்லைன் எந்திரத்தை திருப்பதி எடுத்து செல்லும்போது அங்கிருந்த செம்மரக்கட்டை கடத்தல் கும்பலுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது.

இதையடுத்து திருப்பதி நாமும் செம்மரக்கட்டைகளை வெட்டி கடத்தினால் நிறைய பணம் சம்பாதிக்கலாம் என்ற எண்ணம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் 13 பேரை செம்மரக்கட்டை வெட்டி கடத்துவதற்காக பொம்மிகுப்பத்துக்கு அழைத்து வந்தார். அவர்கள் அனைவரும் அங்குள்ள ஒரு வீட்டில் பதுங்கியிருந்தனர்.

இதுகுறித்து திருப்பத்தூர் தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. துணை போலீஸ் சூப்பிரண்டு ஜேசுராஜ், இன்ஸ்பெக்டர் உலகநாதன், சப்-இன்ஸ்பெக்டர் பிரசன்னா மற்றும் போலீசார் பொம்மிகுப்பத்துக்கு நேற்று இரவு சென்று அவர்களை சுற்றி வளைத்தனர்.

அதைத்தொடர்ந்து திருப்பதி, ஆண்டியூரை சேர்ந்த முருகன் (42), விழுப்புரம் மாவட்டம் கல்வராயன்மலையை சேர்ந்த குமார் (25), மாதவன் (35), மாது (30), செந்தில்குமார் (30), அய்யாசாமி (28), ஈஸ்வரன் (35), ராஜேந்திரன் (40), சந்திரசேகரன் (31), மற்றொரு குமார் (26), வெள்ளையன் (30), தீர்த்தகிரி (30) ஆகிய 13 பேரை கைது செய்தனர். மேலும் அவர்கள் திருப்பதிக்கு செம்மரம் வெட்ட செல்வதாக ஒப்புக்கொண்டனர். அவர்களிடம் இருந்து ஒரு கோடரி, ஒரு கார், 5 மோட்டார்சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இதையடுத்து கைது செய்யப்பட்ட 13 பேரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  #RedSandalwood

Tags:    

Similar News