செய்திகள்

நிவாரண பொருட்களில் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது - தமிழிசை சவுந்தரராஜன்

Published On 2018-08-21 09:11 GMT   |   Update On 2018-08-21 09:11 GMT
நிவாரண பொருட்களில் ‘ஸ்டிக்கர்’ ஒட்டக்கூடாது. இதில் விளம்பரம் தேடுவது தவறு என்று தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார். #KeralaRain #Tamilisaisoundararajan
ஆலந்தூர்:

தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

கோவையை மையமாக கொண்டு தமிழகம் முழுவதும் சேகரிக்கப்பட்ட நிவாரண பொருட்களை பாலக்காடுக்கு கொண்டு செல்ல இருக்கிறோம்.

நிவாரண பொருட்களில் ‘ஸ்டிக்கர்’ ஒட்டக்கூடாது. இதில் விளம்பரம் தேடுவது தவறு. உணர்வுபூர்வமாக உள்ளத்தில் இருந்து செய்ய வேண்டும்.

நாளை டெல்லியில் இருந்து மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்தி கொண்டு வரப்படுகிறது. சென்னை விமான நிலையத்தில் இருந்து ஊர்வலமாக கொண்டு வந்து கமலாலயத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்க உள்ளோம். வாஜ்பாயின் அஸ்தியை கரைக்க 6 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தின் புண்ணிய நதிகளில் அஸ்தி கரைக்கப்படும்.

மத்தியில் ஊழலற்ற ஆட்சி நடக்கிறது. பிரதமர் பதவி விலக வேண்டும் என்று மாவட்ட கலெக்டர், கவர்னரிடம் மனு கொடுக்க போவதாக திருநாவுக்கரசர் சொல்லி வருகிறார். ஊழல் என்றால் என்ன என்று இந்தியாவுக்கே போபர்ஸ் ஊழல் மூலம் பிரகடனம் செய்தது காங்கிரஸ். தரம் தாழ்ந்த அரசியலை காங்கிரசார் செய்து வருகிறார்கள்.

பிரதமர் மோடியை தரம் தாழ்ந்து விமர்சனம் செய்த மணிசங்கர் ஐயரை மீண்டும் காங்கிரசில் சேர்த்து இருப்பது கண்டிக்கத்தக்கது. அவரை கட்சியில் சேர்த்திருப்பது தவறான முன் உதாரணம்.

இவ்வாறு அவர் கூறினார். #KeralaRain #Tamilisaisoundararajan

Tags:    

Similar News