செய்திகள்

ஊதிய உயர்வு கேட்டு அரசு டாக்டர்கள் தர்ணா போராட்டம்

Published On 2018-08-20 05:35 GMT   |   Update On 2018-08-20 05:35 GMT
மத்திய அரசு டாக்டர்களுக்கு இணையாக ஊதியம் வழங்க வேண்டும் என்று தமிழகம் முழுவதும் அரசு டாக்டர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை:

ஜனநாயக அரசு டாக்டர்கள் சங்கம் சார்பில் இன்று தமிழகம் முழுவதும் தர்ணா போராட்டம் நடந்தது.

மத்திய அரசு டாக்டர்களுக்கு இணையாக அரசு டாக்டர்களுக்கு சம்பள உயர்வு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி பணியின் போது ஒரு மணி நேரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், தலைமை மருத்துவமனைகளில் உள்ள ஜனநாயக அரசு டாக்டர்கள் சங்கத்தினர் கோரிக்கையினை வலியுறுத்தி கோ‌ஷங்களை எழுப்பினார்கள்.

சென்னையில் ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் ஜனநாயக அரசு டாக்டர்கள் சங்க மாநில தலைவர் பி.பால கிருஷ்ணன் தலைமையில் இந்த தர்ணா போராட்டம் நடந்தது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட டாக்டர்கள் கலந்து கொண்டனர்.

தர்ணா போராட்டம் குறித்து டாக்டர் பி.பாலகிருஷ்ணன் கூறியதாவது:-

மத்திய அரசில் பணிபுரியும் டாக்டர்களும், தமிழக அரசு ஆஸ்பத்திரியில் பணிபுரியும் அரசு டாக்டர்களுக்கும் இடையே ரூ.25 ஆயிரம் முதல் ரூ.75 ஆயிரம் வரை ஊதிய முரண்பாடு இருக்கிறது.

இதனால் ஆண்டுக்கு பல லட்சம் இழப்பு ஏற்படுகிறது. 7-வது ஊதிய குழுவில் இதனை சரி செய்து அறிவிக்க வேண்டும். 2008-ம் ஆண்டு முதல் ஊதிய முரண்பாடு குறித்து போராடி வருகிறோம். ஆனால் மத்திய அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மத்திய அரசு டாக்டர்களுக்கு இணையாக ஊதியம் வழங்க வேண்டும் என்று தமிழகம் முழுவதும் அரசு டாக்டர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்றார். #tamilnews
Tags:    

Similar News