செய்திகள்

ஓமலூர் அருகே காதலனை அடித்து உதைத்து காதலியை கடத்தி சென்ற உறவினர்கள்

Published On 2018-08-19 13:25 GMT   |   Update On 2018-08-19 13:25 GMT
காதல் திருமணம் செய்து கொண்டு காரில் வரும் போது காரை வழி மறித்து காதலனை தாக்கி காதலியை கடத்தி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஓமலூர்:

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள தெசவிளக்கு பள்ளிக் கொண்டான்பாறை பகுதியை சேர்ந்தவர் பிரபு (வயது 26). இவர் கைத்தறி நெசவு தொழில் செய்து வருகிறார். இதே பகுதியை சேர்ந்தவர் கலைச்செல்வி(20). இவர் வனவாசி பகுதியில் உள்ள தனியார் மகளிர் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.

இந்த நிலையில் பிரபு வேலை செய்யும் பகுதி வழியாக தினமும் கல்லூரி பேருந்து செல்வது வழக்கம். கலைச்செல்வி கடந்த இரண்டு வருடங்களாக பிரபுவை ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் பிரபுவின் செல்போன் என்னுக்கு கலைச்செல்வி யார் என கூறாமல் வாட்ஸ் ஆப் மூலம் தனது காதலை வளர்த்து வந்துள்ளார்.

இதை தொடர்ந்து கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு கலைச்செல்வி தனது காதலை வெளிப்படையாக கூற தாரமங்கலம் கைலாசநாதர் கோவிலுக்கு வருமாறு பிரபுவை அழைத்தார். அவரும் அங்கு சென்று தனது காதலியை முதன் முதலாக பார்த்து, இருவரும் காதலை வெளிப்படையாக தெரிவித்துள்ளனர். நான் உங்களை கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வருவதாகவும். நான் அதே பகுதியை சேர்ந்தவர் எனவும் கூறினார்.

இதை தொடர்ந்து இருவரும் செல்போனில் பேசி வந்தனர். இவர்களின் காதல் கலைச் செல்வியின் வீட்டிற்கு தெரியவந்தது. இதையடுத்து கலைச் செல்விக்கு திருமணம் செய்து வைக்க அவசர அவசரமாக திருமண ஏற்பாடுகள் செய்து வந்தனர். இது குறித்து கலைச்செல்வி காதலன் பிரபுவுக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு பிரபுவிடம் கூறினார். பின்னர் இருவரும் வீட்டை விட்டு வெளியே வந்து ஓமலூர் அருகேயுள்ள காமலாபுரம் பகுதியில் உள்ள அம்மன் கோவிலில் நண்பர்கள் உதவியுடன் திருமணம் செய்து கொண்டனர். 

இதை அறிந்த கலைச்செல்வியின் பெற்றோர் தாரமங்கலம் காவல் நிலையத்தில் தனது மகளை காணவில்லை என புகார் செய்தனர். போலீசார் பிரபுவின் செல்போன் எண்ணுக்கு அழைத்து காவல் நிலையம் வருமாறு கூறியுள்ளனர்.

இதையடுத்து திருமணம் செய்து கொண்ட காதலர்கள் கார் மூலம் தாரமங்கலம் காவல் நிலையம் சென்று கொண்டிருந்தனர். அப்போது ஓமலூர் அருகே சிக்கம்பட்டி என்ற இடத்தில் கார் சென்ற போது மற்றொரு காரில் எதிர்திசையில் இருந்து வந்த கலைச்செல்வியின் உறவினர்கள் காரை வழி மறித்து காதலன் பிரபுவை தாக்கி விட்டு, காதலி கலைச்செல்வியை கடத்தி சென்றனர். இதில் காயமடைந்த பிரபு ஓமலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து தாரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

காதல் திருமணம் செய்து கொண்டு வரும் போது காரை வழி மறித்து காதலனை தாக்கி காதலியை கடத்தி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News