செய்திகள்

காட்பாடியில் வாலிபர் காரில் கடத்தல் - ரவுடி கும்பல் 7 பேரிடம் விசாரணை

Published On 2018-08-17 06:03 GMT   |   Update On 2018-08-17 06:03 GMT
காட்பாடியில் வாலிபர் காரில் கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர்:

காட்பாடி காந்திநகரை சேர்ந்தவர் ரமேஷ். வேலூரில் உள்ள லாரி சர்வீஸ் சென்டரில் மேலாளராக வேலைபார்த்து வருகிறார். இவரது மகன் டிஜோ ரமேஷ் (வயது 29). ஊட்டியில் விசுவல் கம்யூனிகே‌ஷன் படித்து முடித்தார்.

வீட்டில் இருந்தபடி வேலை தேடி வருகிறார். நேற்று இரவு 9 மணிக்கு கடைக்கு செல்வதாக கூறிவிட்டு வெளியே சென்றார். அப்போது காரில் வந்த கும்பல் டிஜோ ரமேசை தூக்கி காரில் உள்ளே போட்டு கடத்தி சென்றனர்.

இதனைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் கூச்சலிட்டனர். அதற்குள் கார் வேலூர் நோக்கி வேகமாக சென்று விட்டது. டிஜோ ரமேஷின் பெற்றோர் பதறியபடி விருதம்பட்டு போலீஸ் நிலையத்துக்கு சென்று புகார் கொடுத்தனர். இன்ஸ்பெக்டர் பழனி மற்றும் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

மேலும் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் மூலம் மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டனர். அனைத்து சாலைகளிலும் போலீசார் வாகன சோதனை நடத்தினர். டிஜோ ரமேஷின் செல்போனை தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

இதற்கிடையே வாலிபர் டிஜோ ரமேஷ் மற்றொரு செல்போனில் இருந்து அவரது பெற்றோரிடம் பேசியுள்ளார். அப்போது என்னை தேட வேண்டாம் எனக் கூறிவிட்டு போனை துண்டித்ததாக கூறப்படுகிறது.

அந்த செல்போன் எண் மூலம் போலீசார் விசாரணையை தொடங்கினர். இந்த நிலையில் கடத்தல் கும்பல் வேலூர் கொணவட்டம் பகுதியில் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் நகராஜன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் கொணவட்டத்தில் குவிக்கப்பட்டனர். நள்ளிரவு 12 மணி முதல் கொணவட்டம், சேண்பாக்கம் பகுதியில் தெரு தெருவாக சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். மேலும் சதுப்பேரி ஏரிக்கரை பகுதியிலும் தேடுதல் வேட்டை நடந்தது.

அதிகாலையில் கடத்தல் கும்பல் கருகம்புத்தூர் பகுதியில் பதுங்கியிருந்ததை செல்போன் மூலம் போலீசார் கண்டு பிடித்தனர். போலீசார் அங்கு சென்று விசாரித்தனர்.

அதற்குள் கும்பல் தலைமறைவாகி விட்டனர். இன்று காலை காட்பாடி, விருதம்பட்டு பகுதியில் போலீசார் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

வாலிபரை எதற்காக யார் கடத்தி சென்றார்கள் என்ற விவரம் இதுவரை தெரியவில்லை.

வாலிபர் கடத்தல் சம்பவத்தில் காட்பாடி, விருதம்பட்டு ரவுடி கும்பலுக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து ரவுடி கும்பலை சேர்ந்த 7 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்த சம்பவம் காட்பாடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News