செய்திகள்

சங்கரன்கோவில் அருகே பெண்ணை அடித்துக் கொன்ற தொழிலாளி தற்கொலை முயற்சி

Published On 2018-07-29 10:55 GMT   |   Update On 2018-07-29 10:55 GMT
பெண்ணை அடித்துக்கொன்று தொழிலாளி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சங்கரன்கோவில்:

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள மேல மரத்தோணி காலனி தெருவை சேர்ந்தவர் சந்திரசேகர். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சங்கரேசுவரி (வயது 35). ஆடு மேய்க்கும் தொழிலாளி.

அதே பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி கருப்பசாமி (45). சந்திரசேகர் வெளிநாட்டில் வேலை செய்வதால் சங்கரேசுவரி குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார். சங்கரேசுவரியின் தனிமையை அறிந்து அவருக்கு கருப்பசாமி அடிக்கடி பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

இதற்கு சங்கரேசுவரி மறுத்ததோடு அதை வெளியில் சொல்ல முடியாமல் தவித்தார்.இதுதொடர்பாக அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்தநிலையில் நேற்று இரவு 7 மணி அளவில் ஊர் அருகே உள்ள தனியார் தோட்டத்தில் சங்கரேசுவரி ஆடு மேய்த்துக் கொண்டு இருந்தார்.

அவருடன் அதே பகுதியை சேர்ந்த மாரியப்பன் மனைவி முருகலட்சுமி (42) என்பவரும் ஆடு மேய்த்தார். அப்போது அங்கு வந்த கருப்பசாமி, சங்கரேசுவரியின் கையை பிடித்து இழுத்து மீண்டும் பாலியல் தொல்லை கொடுத்தார். இதனால் அவர்களுக்கு இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அருகில் நின்ற முருகலட்சுமியும் கருப்பசாமியை கண்டித்தார். தகராறு முற்றியதில் ஆத்திரம் அடைந்த கருப்பசாமி, அருகே கிடந்த கம்பை எடுத்து சங்கரேசுவரியை சரமாரியாக தாக்கினார். இதில் சங்கரேசுவரிக்கு தலை மற்றும் முகத்தில் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பிணமானார்.

இதையடுத்து அங்கிருந்து கருப்பசாமி தப்பிச் சென்று விட்டார். கொலையை நேரில் பார்த்ததால் அதிர்ச்சியடைந்த முருகலட்சுமி இதுபற்றி கரிவலம்வந்தநல்லூர் போலீசுக்கு தகவல் கொடுத்தார். சங்கரன்கோவில் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் சங்கரேசுவரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாகி உள்ள கருப்பசாமியை தேடி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட சங்கரேசுவரிக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். கருப்பசாமிக்கு திருமணமாகி 4 குழந்தைகள் உள்ளனர்.

இதனிடையே சங்கரேசுவரி கொலைபற்றி அறிந்ததும் அவரது உறவினர்கள் அப்பகுதியில் கூடினர். ஆத்திரத்தில் அவர்கள் கருப்பசாமியின் வீட்டை அடித்து நொறுக்கி சூறையாடினார்கள் இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்துக்கு போலீசார் வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இதனிடையே சங்கரேசுவரியை கொலை செய்த கருப்பசாமி ஊருக்கு ஒதுக்குப்புறமான தோட்டத்து பகுதியில் இன்று காலை வி‌ஷம் குடித்த நிலையில் மயங்கி கிடந்தார். தகவல் கிடைத்ததும் கரிவலம்வந்தநல்லூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கருப்பசாமியை மீட்டு சிகிச்சைக்காக சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

சங்கரேசுவரி கொலையில் போலீசுக்கு பயந்து அவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது. பெண்ணை அடித்துக்கொன்று தொழிலாளி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சம்பவம் நடந்த மேல மரத்தோணி காலனி பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். 

Tags:    

Similar News