செய்திகள்
சிறுமி சுபிக்ஷா

ராணிப்பேட்டை சிப்காட்டில் கிராம நிர்வாக அதிகாரி மகள் கடத்தல் - போலீஸ் தீவிர விசாரணை

Published On 2018-07-28 07:16 GMT   |   Update On 2018-07-28 07:16 GMT
ராணிப்பேட்டையில் கிராம நிர்வாக அலுவலர் மகள் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமி சுபிக்ஷாவை தீவிரமாக தேடி வருகின்றனர்.
வாலாஜா:

ராணிப்பேட்டை சிப்காட் ராஜாஜி தெரு ஐ.ஓ.பி. நகரை சேர்ந்தவர் துளசிராமன். ராணுவ வீரராக பணியாற்றி வந்த இவர், இறந்துவிட்டார். துளசி ராமனின் மனைவி ராஜேஸ்வரி (வயது 32). கலவை அடுத்த முள்ளுவாடி கிராம நிர்வாக அலுவலராக உள்ளார்.

இவர்களது 10 வயது மகள் சுபிக்ஷா, ராணிப்பேட்டை மணியம்பட்டு கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பு படிக்கிறார். நேற்று காலை வழக்கம்போல் சிறுமி சுபிக்ஷா பள்ளிக்கு சென்றார்.

ராஜேஸ்வரியும் பணிக்கு சென்றுவிட்டார். மாலையில் பள்ளியில் இருந்து திரும்பி வீட்டில் இருந்த சுபிக்ஷா, திடீரென மாயமாகிவிட்டார். பணி முடிந்து வீட்டிற்கு வந்த தாய் ராஜேஸ்வரி, மகள் இல்லாததையறிந்து அதிர்ச்சி அடைந்தார்.

பல இடங்களில் சென்று மகளை தேடினார். எனினும், சுபிக்ஷா கிடைக்கவில்லை. இந்த நிலையில், சிறுமி கடத்தப்பட்டதாக தகவல் பரவியது.

இதுபற்றி கிராம நிர்வாக அலுவலர் ராஜேஸ்வரி, சிப்காட் போலீசில் புகார் அளித்தார்.

போலீசார், வழக்குப்பதிவு செய்து சிறுமி சுபிக்ஷாவை தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும், அந்த பகுதியில் சந்தேகப்படும்படி நபர்கள் யாரேனும் சுற்றித் திரிந்தார்களா? என்பது குறித்து அக்கம், பக்கத்தில் வசிப்பவர்களிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.



Tags:    

Similar News