செய்திகள்

கணவர் கண்டித்ததால் பெண் தற்கொலை: கள்ளக்காதலனும் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2018-07-18 02:31 GMT   |   Update On 2018-07-18 02:31 GMT
கணவர் கண்டித்ததால் பெண் தற்கொலை செய்து கொண்டார். இதனால் மனம் உடைந்த அந்த பெண்ணின் கள்ளக்காதலனும் தூக்குப்போட்டு உயிரை மாய்த்துக் கொண்டார்.
ஓட்டப்பிடாரம்:

தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூர் அருகே வள்ளிநாயகபுரம் காட்டுப்பகுதியில் வேப்பமரம் ஒன்றில் வாலிபர் ஒருவரது பிணம் தூக்கில் தொங்கியது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அந்த வாலிபரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில், தூக்கில் பிணமாக தொங்கியது அங்குள்ள காற்றாலை நிறுவனம் ஒன்றில் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்த முருகராஜ் (வயது 20) என்பது தெரியவந்தது. முருகராஜின் சொந்த ஊர் நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே கன்டிகைப்பேரியாகும். இவர், புதியம்புத்தூரில் தங்கி இருந்து காற்றாலை நிறுவனத்தில் வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது.

மேலும் முருகராஜ், வேப்ப மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதும் போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின. அதன் விவரம் வருமாறு:-

கன்டிகைப்பேரியில் உள்ள செங்கல் சூளையில் நெல்லை மாவட்டம் சுரண்டை பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது குடும்பத்தினருடன் தங்கி இருந்து வேலை பார்த்து வந்தார். அந்த பெண்ணுக்கும், முருகராஜிக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் அவர்களுக்கு இடையே நெருக்கத்தை ஏற்படுத்தியது.

இருவரும் ரகசியமாக சந்தித்து கள்ளக்காதலை வளர்ந்து வந்ததாக தெரிகிறது. இந்த விவரம் அரசல் புரசலாக அந்த பெண்ணின் கணவருக்கு தெரிய வரவே, மனைவியை கண்டித்தார். இவர்களது கள்ளக்காதல் விவகாரம் வெளியே தெரிய வரவே முருகராஜ், புதியம்புத்தூருக்கு வேலைக்கு வந்தார். அதன்பிறகும் அந்த பெண்ணுடன், முருகராஜ் செல்போனில் அடிக்கடி பேசி வந்தார். அந்த பெண்ணும் பெரும்பாலான நேரங்களில் முருகராஜிடம் செல்போனில் பேசிக்கொண்டு இருந்தார்.

இந்த விவரம் அந்த பெண்ணின் கணவருக்கு தெரியவந்தது. அவர், மீண்டும் மனைவியை கண்டித்தார். தனது கள்ளக்காதலனுடன் பேச முடியவில்லையே என்று மனம் உடைந்த அந்த பெண் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனை அறிந்த முருகராஜ் மிகவும் மனம் உடைந்து காணப்பட்டார். இதற்கிடையே நேற்று முன்தினம் புதியம்புத்தூர் வள்ளிநாயகிபுரம் காட்டுப்பகுதியில் வேப்பமரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்த விவரம் போலீசார் விசாரணையில் வெளியானது. முருகராஜ் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
Tags:    

Similar News