செய்திகள்
கொள்ளை நடந்த வீட்டை படத்தில் காணலாம்.

கடலூரில் ஓட்டல் அதிபர் வீட்டில் ரூ.4 லட்சம் நகை கொள்ளை

Published On 2018-07-17 04:50 GMT   |   Update On 2018-07-17 04:50 GMT
கடலூரில் ஓட்டல் அதிபர் வீட்டின் கதவை உடைத்து ரூ.4 லட்சம் மதிப்பிலான நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
கடலூர்:

கடலூர் கூத்தப்பாக்கத்தை சேர்ந்தவர் செல்வ குமார் (வயது 42). இவரது மனைவி பவானி (37). இவர்களுக்கு 2 மகன், ஒரு மகள் உள்ளனர்.

செல்வகுமார் கூத்தப்பாக்கத்தில் ஓட்டல் நடத்தி வருகிறார். அவரது மனைவி தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக பணியாற்றி வருகிறார்.

நேற்று செல்வகுமார் ஓட்டலுக்கு சென்று விட்டார். குழந்தைகள் பள்ளிக்கு சென்று விட்டனர். பின்னர் பவானி வீட்டை பூட்டி விட்டு ஆஸ்பத்திரிக்கு வேலைக்கு சென்று விட்டார். இதைநோட்டமிட்ட மர்ம வாலிபர் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே சென்றார்.

அங்கிருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த 20 பவுன் நகையை கொள்ளையடித்தார்.

மாலையில் செல்வகுமாரின் ஓட்டலில் வேலை பார்க்கும் அஞ்சாலட்சி என்பவர் செல்வகுமாரின் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டுக்குள் இருந்து அந்த வாலிபர் வெளியே ஓடினார்.

இதைப்பார்த்த அஞ்சாலட்சி திடுக்கிட்டார். ஓட்டல் அதிபர் செல்வகுமாருக்கு தகவல் தெரிவித்தார். உடனே அவர் வீட்டுக்கு வந்து பார்த்த போது முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது.

உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த 20 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டில் கொள்ளை போன நகைகளின் மதிப்பு ரூ.4 லட்சம் ஆகும்.

இது குறித்து திருப்பாதிரிப்புலியூர் போலீசில் செல்வகுமார் புகார் செய்தார். போலீசார் விரைந்து சென்று கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டனர்.

மேலும் இந்த கொள்ளையில் துப்பு துலக்க கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் கைரேகைகளை பதிவு செய்தனர். வீடு புகுந்து நகை கொள்ளையடித்து சென்ற மர்ம வாலிபரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
Tags:    

Similar News