செய்திகள்

அறந்தாங்கி அருகே மகனுடன் தொழுகைக்கு சென்ற தொழிலதிபர் காரில் கடத்தல்

Published On 2018-07-15 17:12 GMT   |   Update On 2018-07-15 17:36 GMT
அறந்தாங்கி அருகே இன்று காலை மகனுடன் தொழுகைக்கு சென்ற தொழிலதிபரை 4 பேர் கொண்ட கும்பல் காரில் கடத்தி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அறந்தாங்கி:

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த கோட்டைப்பட்டினம் சத்திரம் தெருவை சேர்ந்தவர் சர்க்கரை ஜமால் என்ற ஜமால் முகமது (வயது 50).

கோட்டைப்பட்டினம் பகுதியை சேர்ந்த மீனவர்களிடம் மீன்களை வாங்கி அதனை பதப்படுத்தி வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் தொழில் செய்து வருகிறார். இதற்காக அவர் பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தமும் செய்திருந்தார்.
தினமும் அதிகாலையில் எழும் ஜமால் முகமது சிறிது நேரம் நடைபயிற்சி மேற்கொண்டுவிட்டு தொழுகைக்கு செல்வது வழக்கம். அதேபோல் இன்று அதிகாலை எழுந்த அவர் தனது மகன் யாசர் அராபத் (25)துடன் 4.45 மணியளவில் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தவ்ஹீத் பள்ளி வாசலுக்கு தொழுகை நடத்த நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கு திடீரென டவேரா கார் ஒன்று வந்து நின்றது. அதிலிருந்து இறங்கிய 4 பேர் கொண்ட கும்பல் கண்ணிமைக்கும் நேரத்தில் ஜமால் முகமதுவை குண்டுகட்டாக தூக்கி காரில் போட்டது. இதனை தடுத்த அவரது மகன் யாசர் அராபத்தை அந்த கும்பலை சேர்ந்தவர்கள் கீழே தள்ளி விட்டு அங்கிருந்து சென்றனர்.

அதிகாலை நேரமாக இருந்ததால் செய்வதறியாது தவித்த யாசர் அராபத் ஊருக்குள் சென்று  தனது உறவினர்களிடம் தெவித்தார்.  அவர்கள்  சம்பவம் நடந்த இடத்திற்கு திரண்டு வந்தனர். காரில் கடத்தி சென்றவர்கள் யார்? எதற்காக கடத்தினார்கள்? என்ற விபரம் தெரியாமல் அவர்கள் பதட்டம் அடைந்தனர்.

பின்னர் நடந்த சம்பவம் குறித்து யாசர் அராபத் கோட்டைப்பட்டினம் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதற்கிடையே வெளிநாடுகளுக்கு மீன் ஏற்றுமதி செய்யும் தொழில் செய்து வந்த ஜமால் முகமதுவுக்கு ஏராளமான தொழில் போட்டிகள் இருந்துள்ளது. கோடிக்கணக்கில் பணம் புரளும் தொழிலுக்கு போட்டியாக இருந்தவர்கள் ஜமால் முகமதுவை கடத்தி சென்றார்களா? அல்லது அவரிடம் பணம் பறிக்கும் நோக்கில் மர்ம கும்பலை சேர்ந்தவர்கள் கடத்தி சென்றார்களா? என்பது  உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

சமீப காலமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து கடலோர பகுதிகள் வழியாக கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதில் தொடர்புடைய நபர்கள் கடத்தலில் ஈடுபட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தில் அடிப்படையிலும் போலீசார் முதல் கட்டவிசாரணையை தொடங்கி உள்ளனர்.
Tags:    

Similar News