மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவர் நியமனத்தை எதிர்த்து வழக்கு - பதில் அளிக்க அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
சென்னை:
தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரிய தலைவராக முகமது நசீமுதீன் நியமிக்கப்பட்டதை எதிர்த்து வழக்கு பூவுலகின் நண்பர்கள் அமைப்பை சேர்ந்த சுந்தர் ராஜன் என்பவர் கோ வாரண்டோ வழக்கை தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஆர்.சுப்பிரமணியம் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல், ‘சுற்று சூழல் பாதுகாப்பு குறித்து நிபுணத்துவம், அனுபவம் இல்லாத நபரை வாரிய தலைவராக தமிழக அரசு நியமித்துள்ளது. வனம் மற்றும் சுற்று சூழல் துறை முதன்மை செயலாளராக உள்ள நசீமுதீன் தற்போது கூடுதல் பொறுப்பாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இவருடைய நியமனம் உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது’ என்று வாதிட்டார்.
அப்போது நீதிபதிகள், ‘சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுபடி மாசுகட்டுப்பாட்டு வாரியம் தலைவர் பதவி நியமனத்திற்கான விதிகள் உருவாக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?’ என்று கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த அரசு வக்கீல் அந்த விதிகளை உருவாக்க நடவடிக்கை எடுத்து வருதாக கூறினார். இதையடுத்து இந்த வழக்கிற்கு பதில் அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை வருகிற ஜூலை 4-ந் தேதிக்கு தள்ளிவைத்தனர்.