செய்திகள்

சத்தியமங்கலத்தில் இன்று அதிவிரைவுப்படை போலீஸ்காரர் தற்கொலை

Published On 2018-06-27 10:24 IST   |   Update On 2018-06-27 10:24:00 IST
சத்தியமங்கலத்தில் அதிவிரைவுப்படை போலீஸ்காரர் இன்று தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தையடுத்து பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சத்தியமங்கலம்:

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சிறப்பு அதிரடிப்படை போலீஸ் அலுவலகத்தில் போலீஸ்காரராக பணி புரிந்தவர் கோபி (வயது 38). இவரது சொந்த ஊர் விருத்தாசலம்.

மனைவி பெயர் பாரதி. இவர்களுக்கு சாதிஷா (8) என்ற ஒரு மகள் உள்ளார். சிறப்பு அதிரடிப்படை அலுவலக வளாகத்தில் குடியிருப்பு பகுதி உள்ளது.

இங்கு போலீஸ்காரர் கோபி மட்டும் வசித்து வந்தார். மனைவியும், மகளும் விருத்தாசலத்தில் வசிக்கிறார்கள்.

இந்த நிலையில் இன்று அதிகாலையில் கோபி தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்ற காரணம் உடனடியாக தெரியவில்லை.

இது பற்றி தகவல் கிடைத்ததும் சத்தியமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். அவர்கள் கோபியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கோபியின் தற்கொலை குறித்து அவரது மனைவி மற்றும் குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சத்தியமங்கலத்துக்கு விரைந்து வந்தனர்.

குடும்ப தகராறு காரணமாக கோபி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேலைப்பளு காரணமாக தற்கொலை செய்தாரா? என்ற பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News