செய்திகள்
அரசு பள்ளியில் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் ஆய்வு செய்த காட்சி.

பற்றாக்குறை உள்ள மாவட்டத்துக்கு மட்டுமே ஆசிரியர்கள் மாறுதல் - அமைச்சர் செங்கோட்டையன்

Published On 2018-06-22 09:58 IST   |   Update On 2018-06-22 09:58:00 IST
எந்தெந்த மாவட்டங்களில் ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளதோ அந்த மாவட்டங்களுக்கு மட்டுமே ஆசிரியர்கள் மாறுதல் வழங்கப்படும் என்று கல்வி அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். #MinisterSengottaiyan
ஈரோடு:

ஈரோட்டில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளி காமராஜர் மேல்நிலைப்பள்ளி, திருநகர் காலனியில்உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளிகளில் கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் திடீரென வந்து ஆய்வு செய்தார்.

மாணவர்களின் வருகை பதிவேடுகளை ஆய்வு செய்த அமைச்சர் மாணவ-மாணவிகளிடம் குறைகளையும் கேட்டார். தொடர்ந்து அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:-

சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை மிஞ்சும் வகையில் அரசின் புதிய பாடத்திட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளது. கல்வி அறிவோடு படிக்கும் பருவத்திலேயே மாணவர்களுக்கு ஒழுக்கத்தை நமது ஆசிரியர்கள் கற்றுக்கொடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் இருந்து சிறந்த கல்வியாளர்களை வரவழைத்து அவர்கள் மூலம் மாணவ-மாணவிகளுக்கு ஆங்கில பயிற்சி அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி போன்ற மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் கூடுதல் ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள்.

இதனால் அங்கு மேலும் ஆசிரியர்களை நியமிக்க இயலாது. அதே சமயம் வட மாவட்டங்களில் ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது.

இதை உணர்ந்து எந்தெந்த மாவட்டங்களில் ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளதோ அந்த மாவட்டங்களுக்கு மாறுதல் வழங்கலாம் என உத்தரவிடப்பட்டு உள்ளது.

அதே சமயம் இனி வட மாவட்டங்களில் இருந்து தென் மாவட்டங்களுக்கு ஆசிரியர்கள் பணி மாறுதல் கிடையாது.

அனைத்து மாணவர்களும் உலக செய்திகளை உட னுக்குடன் தெரிந்து கொள்ள திறன் வழிக்கற்றல் பயிற்சி வகுப்பறை விரைவில் 3 ஆயிரம் பள்ளிகளில் தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாறு அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் கூறினார். இந்த ஆய்வின் போது எம்.எல்.ஏ.க்கள் கே. வி. ராமலிங்கம், கே.எஸ். தென்னரசு ஆகியோர் உடன் இருந்தனர். #MinisterSengottaiyan


Tags:    

Similar News