செய்திகள்

கொடுங்கையூரில் வாலிபர் அடித்துக் கொலை- நண்பர்கள் 6 பேர் கைது

Published On 2018-06-18 06:44 GMT   |   Update On 2018-06-18 06:44 GMT
கிரிக்கெட் மட்டையை திருடிய தகராறில் கொடுங்கையூரில் வாலிபர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில் நண்பர்கள் 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
பெரம்பூர்:

கொடுங்கையூர் தென்றல் நகர் 4-வது தெருவை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 28). பெயிண்டர்.

கடந்த 5-ந் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற அவர் திரும்பி வரவில்லை. இந்த நிலையில் கண்ணதாசன் நகர் பஸ் நிலையம் அருகே உள்ள கால்வாயில் விக்னேஷ் இறந்து கிடந்தார். அவரது உடலை கொடுங்கையூர் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

கால்வாயில் தவறி விழுந்து விக்னேஷ் இறந்து இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே பிரேத பரிசோதனை அறிக்கையில் விக்னேஷ் அடித்து கொலை செய்யப்பட்டிருப்பது தெரிந்தது.

இதையடுத்து அவரது நண்பர்களை பிடித்து விசாரித்தனர். இதில் கிரிக்கெட் மட்டையை திருடிய தகராறில் விக்னேசை நண்பர்களே அடித்து கொன்றிருப்பது தெரிந்தது.

இது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த நொள்ள சுரேஷ், மணிகண்டன், மோகன், கார்த்திகேயன், குமார், பிரபாகரன் ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு நொள்ள சுரேசின் கிரிக்கெட் மட்டை மாயமானது. அதனை விக்னேஷ் திருடி வைத்திருந்ததாக தெரிகிறது. இதனை சுரேஷ் திருப்பி கேட்டும் கொடுக்கவில்லை. இதில் ஏற்பட்ட தகராறில் சுரேஷ் நண்பர்களுடன் சேர்ந்து விக்னேசை அடித்து கொன்றிருப்பது விசாரணையில் தெரிய வந்தது.

கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. #Tamilnews
Tags:    

Similar News