செய்திகள்
கடல் கொந்தளிப்பால் பாம்பனில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள விசைப்படகுகள்.

தடைகாலம் முடிந்தும் கடல் கொந்தளிப்பால் மீன்பிடிக்க செல்ல தடை - மீனவர்கள் ஏமாற்றம்

Published On 2018-06-15 04:57 GMT   |   Update On 2018-06-15 04:59 GMT
மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரித்துள்ளதால் மீனவர்கள் இன்று கடலுக்கு செல்ல மீன்வளத்துறை அனுமதி டோக்கன் வழங்கவில்லை.
ராமேசுவரம்:

ஒவ்வொரு வருடமும் மீன்களின் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டு ஏப்ரல் முதல் 2 மாதங்களுக்கு தமிழக கடலில் மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்படும். 60 நாட்கள் நீடிக்கும் இந்த தடைகாலங்களில் நாட்டுப் படகு மட்டும் மீன்பிடிக்க அனுமதிக்கப்படும்.

இந்த 2 மாதத்தை மீனவர்கள் தங்களது விசைப் படகுகளை பராமரிப்பது, வலைகள் மீன்பிடி சாதனங்களை தயார் செய்வது போன்ற பணிகளில் ஈடுபடுவார்கள். தடை காலங்களில் மீனவர்கள் வேறு வேலைக்கும் செல்வார்கள்.

இந்த ஆண்டு ஏப்ரல் 15-ந் தேதி தொடங்கிய மீன்பிடி தடை நேற்று (14-ந் தேதி) இரவுடன் முடிவுக்கு வந்தது. இதையொட்டி பாம்பன், தங்கச்சி மடம் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு செல்ல தயாராகிக் கொண்டிருந்தனர்.

ஆனால் வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக பாம்பன் பகுதியில் பலத்த காற்றுடன் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. இதன் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரித்து இருந்தது.

அதன் அடிப்படையில் இன்று மீனவர்கள் கடலுக்கு செல்ல மீன்வளத்துறை அனுமதி டோக்கன் வழங்கவில்லை. தடைகாலம் முடிந்தும் கடலுக்கு செல்ல அனுமதிக்காததால் மீனவர்கள் ஏமாற்றுத்துடன் வீடு திரும்பினர்.

ராமேசுவரம், மண்டபம், தொண்டி உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை(இன்று) விடுமுறை என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. நாளை (15-ந் தேதி) இப்பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்வார்கள்.

இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில், 60 நாட்கள் தடை காலம் முடிந்த நிலையில் கடலுக்கு செல்கிறோம் என்ற ஆர்வத்துடன் இருந்தோம். ஆனால் கடல் கொந்தளிப்பால் கடலுக்கு செல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது என்றனர்.

Tags:    

Similar News