செய்திகள்
மாணவி வள்ளி

குத்தாலம் அருகே ஆசிரியை கண்டித்ததால் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2018-06-14 04:23 GMT   |   Update On 2018-06-14 04:23 GMT
ஆசிரியை கண்டித்ததால் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பழைய கூடலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குத்தாலம்:

நாகை மாவட்டம் குத்தாலம் அருகே பாலையூர் காவல் சரகத்துக்கு உட்பட்ட பழையகூடலூர் கிராமத்தை சேர்ந்தவர் கலியபெருமாள். கூலித்தொழிலாளி. இவரது மகள் வள்ளி (வயது17) அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

இந்த நிலையில் வள்ளி நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த பாலையூர் இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, வள்ளியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே வயிற்று வலியால் வள்ளி தற்கொலை செய்து கொண்டதாக அவரது தந்தை கலியபெருமாள் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

நேற்று மாலை 5 மணியளவில் வள்ளியின் உடல் பிரேத பரிசோதனை செய்து முடிக்கப்பட்டது. இந்தநிலையில் வள்ளியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளி ஆசிரியை கண்டித்ததால் மனஉளைச்சல் ஏற்பட்டுத்தான் மாணவி வள்ளி இறந்ததாக புகார் தெரிவித்தனர்.

மாணவியின் உறவினர்கள் சாலை மறியல் செய்த போது எடுத்த படம்.

மேலும் வயிற்று வலியால் தான் மாணவி இறந்ததாக மாணவியின் தந்தையை மிரட்டி பள்ளி நிர்வாகம் எழுதி வாங்கி கொண்டதாக புகார் தெரிவித்தனர்.

இதனால் பள்ளி நிர்வாகத்தின் மீதும், சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீதும் நடவடிக்கை எடுத்தால் தான் உடலை வாங்குவோம் என்று கூறி மாலையில் மயிலாடுதுறை அரசு மருத்துவமனை முன்பு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதபற்றி தகவல் கிடைத்ததும் டி.எஸ்.பி.வெங்கடேசன் தலைமையில் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர்.

அப்போது போலீசார், இதுபற்றி விசாரணை நடத்தப்படும் என்று கூறினர். இதை ஏற்று மாணவியின் உறவினர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். #Tamilnews
Tags:    

Similar News