செய்திகள்

மகன் இறந்த 20 ஆண்டுக்கு பிறகு தாயாருக்கு ரூ.15 லட்சம் நஷ்டஈடு

Published On 2018-06-11 04:51 GMT   |   Update On 2018-06-11 04:51 GMT
தவறான அறுவை சிகிச்சையால் மகன் இறந்த 20 ஆண்டுக்கு பிறகு தாயாருக்கு ரூ.15 லட்சம் நஷ்ட ஈடு வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை:

சேலத்தை சேர்ந்தவர் ஈஸ்வரி கண்ணன், இவரது மகன் கே.ரவிக்குமார் (28). இவர் கடுமையான காது வலியால் அவதிப்பட்டார்.

எனவே கடந்த 1999-ம் ஆண்டு ஜனவரி 11-ந்தேதி சென்னையில் உள்ள ஒரு தனியார் காது, மூக்கு, தொண்டை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதற்காக ஈஸ்வரி கண்ணன் ரூ.21,600 கட்டணம் செலுத்தினார். இதற்கிடையே, ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட மறுநாள் இரவு ரவிக்குமாருக்கு ஆபரேசன் நடத்தப்பட்டது.

அப்போது ரவிக்குமாருடன் அவரது சகோதரி இருந்தார். ஆனால் அவரிடம் தகவல் எதுவும் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் ஆபரேசன் முடிந்த ஒரு வாரத்தில் அவர் சேலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

ஆனால் அவர் கடுமையான தலை வலியால் அவதிப்பட்டார். எனவே, அவரை பிப்ரவரி 15-ந்தேதி சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு 2 நாட்களுக்கு பிறகு அவர் மரணம் அடைந்தார்.

இதுகுறித்து சென்னை நுகர்வோர் கோர்ட்டில் ரவிக்குமாரின் தாயார் ஈஸ்வரி கண்ணன் புகார் செய்தார். தவறான ஆபரேசன் மற்றும் சிகிச்சையால் தனது மகன் மரணம் அடைந்து விட்டதாக தெரிவித்து இருந்தார்.

வழக்கு விசாரணை நுகர்வோர் கோர்ட்டு தலைவர் கே.ஜெயபாலன் தலைமையிலான பெஞ்ச் முன்பு நடந்தது. இறுதியில் ஈஸ்வரிகண்ணனுக்கு ஆஸ்பத்திரி நிர்வாகம் ரூ.15 லட்சம் நஷ்டஈடு வழங்க உத்தரவிட்டது.

ரவிக்குமார் மரணம் அடைந்து கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் ஆகிறது. உடனே வழக்கு தொடரப்பட்ட நிலையில் தற்போது நஷ்டஈடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #Tamilnews
Tags:    

Similar News