செய்திகள்
தடுப்பு கட்டை மீது மோதிய காரின் முன்பகுதி சேதமடைந்திருப்பதை படத்தில் காணலாம்.

திண்டிவனம் அருகே கார் விபத்தில் 2 பேர் பலி

Published On 2018-05-31 10:00 IST   |   Update On 2018-05-31 10:00:00 IST
திண்டிவனம் அருகே சாலையின் தடுப்புக்கட்டையில் மோதி கார் கவிழ்ந்த விபத்தில் 2 பேர் பலியாகினர்.
திண்டிவனம்:

நெல்லை மாவட்டம் தென்காசியை அடுத்த ஆணைக்குளம் பகுதியை சேர்ந்தவர் பீர்முகமது(வயது 57). இவரது மகளுக்கு திருமணம் நடைபெற உள்ளது.

அந்த திருமண பத்திரிகையை சென்னையில் உள்ள உறவினர்களுக்கு கொடுப்பதற்காக பீர் முகமது தனது உறவினர்களான அகமது உசேன்(65), அப்துல் ரகுமான்(27) ஆகியோருடன் காரில் சென்னைக்கு புறப்பட்டார்.

காரை அப்துல் ரகுமான் ஓட்டினார். அந்த கார் இன்று காலை விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்த பாதிரி பஸ் நிறுத்தம் அருகே வந்து கொண்டிருந்தது.

அப்போது கார் அப்துல் ரகுமானின் கட்டுபாட்டை இழந்து தாறுமாறாக ஓடி அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த அரசு பஸ் மீது மோதுவதுபோல் சென்றது. அந்த பஸ் மீது மோதாமல் இருக்க காரை அப்துல்ரகுமான் வலதுபக்கமாக திருப்பினார். அப்போது அங்கிருந்த சாலையின் தடுப்புக்கட்டையில் மோதி கார் கவிழ்ந்தது.

இதில் அப்துல்ரகுமான் மற்றும் அகமது உசேன் ஆகியோர் காரின் இடிபாட்டுக்குள் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். பீர்முகமது பலத்த காயம் அடைந்தார்.

விபத்து குறித்து தகவல் அறிந்த ஒலக்கூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உயிருக்கு போராடி கொண்டிருந்த பீர்முகமதை மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தினால் அந்த பகுதியில் ½ மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Tags:    

Similar News