செய்திகள்

பள்ளி ஆசிரியையை பணி நிரந்தரம் செய்ய லஞ்சம் வாங்கிய உதவி தொடக்க கல்வி அலுவலர் கைது

Published On 2018-05-31 04:03 GMT   |   Update On 2018-05-31 04:03 GMT
நெல்லையில் பள்ளி ஆசிரியையை பணி நிரந்தரம் செய்ய ரூ.3¼ லட்சம் லஞ்சம் வாங்கிய உதவி தொடக்க கல்வி அலுவலரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
நெல்லை:

நெல்லை மாவட்டம் ஏர்வாடியை சேர்ந்தவர் ரேச்சல் ஜானட் (வயது 42). இவர் நம்பித்தலைவன் பட்டயத்தில் உள்ள ஆர்.சி. தொடக்க பள்ளியில் இடைநிலை ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவருக்கு பள்ளிக்கூட நிர்வாகம் பணி நியமனம் செய்த போதும், கல்வித்துறை அந்த பணியை நிரந்தரம் செய்து ஒப்புதல் அளிக்கவில்லை.

பணி நிரந்தரம் செய்வதற்கு களக்காடு உதவி தொடக்க கல்வி அலுவலர் இசக்கிமுத்து, அவருடைய உதவியாளர் கனகசபாபதி ஆகியோர் ரூ.3 லட்சத்து 30 ஆயிரம் லஞ்சமாக தர வேண்டும் என்று ஆசிரியையின் சகோதரர் ஜான் வின்சென்ட்டிடம் கேட்டதாக தெரிகிறது. ஆனால், லஞ்சம் கொடுக்க விரும்பாத ஜான் வின்சென்ட் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.

இதனையடுத்து போலீசாரின் அறிவுரைபடி ரசாயன பவுடர் தடவிய ரூ.3 லட்சத்து 30 ஆயிரத்தை நேற்று மாலையில் நெல்லையில் உள்ள மாவட்ட தொடக்க கல்வி அலுவலகத்துக்கு ஜான் வின்சென்ட் கொண்டு சென்றார். அங்கு இருந்த இசக்கிமுத்து, கனகசபாபதி ஆகியோர் அந்த பணத்தை வாங்கியதாக கூறப்படுகிறது. அப்போது, மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும், களவுமாக 2 பேரையும் பிடித்து கைது செய்தனர்.

Tags:    

Similar News