செய்திகள்

தூத்துக்குடி கலவரம் தொடர்பாக மேலும் 2 வழக்குகள் சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றம்

Published On 2018-05-31 03:30 GMT   |   Update On 2018-05-31 03:30 GMT
தூத்துக்குடியில் நடந்த கலவரம் தொடர்பாக மேலும் 2 வழக்குகள் சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றப்பட்டு உள்ளன.
தூத்துக்குடி:

தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து தூத்துக்குடி வடபாகம், தென்பாகம், சிப்காட் ஆகிய போலீஸ் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளன. இந்த வழக்குகள் சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றப்பட்டு உள்ளன.

இதன் விசாரணை அதிகாரியாக நெல்லை சி.பி.சி.ஐ.டி. துணை போலீஸ் சூப்பிரண்டு அனில்குமார் நியமிக்கப்பட்டு உள்ளார். மேலும் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் குமார் மற்றும் வெளிமாவட்டங்களை சேர்ந்த 20 சி.பி.சி.ஐ.டி. போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பணியமர்த்தப்பட்டனர். நேற்று முன்தினம் ஒரு சில போலீசாரே தூத்துக்குடிக்கு வந்தனர்.

நேற்று சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் விசாரணை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு பிரவீன்குமார் தூத்துக்குடிக்கு இன்னும் வரவில்லை என்றும், இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை மாவட்ட போலீஸ் அதிகாரிகள் இன்னும் சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் ஒப்படைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இருந்தபோதிலும் போலீசார் சம்பவம் நடந்த இடங்களுக்கு சென்று தடயங்களை சேகரிக்கும் பணியில் நேற்று ஈடுபட்டனர். இன்று (வியாழக்கிழமை) சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணையை முழுவீச்சில் தொடங்க உள்ளனர்.

இந்த நிலையில் தூத்துக்குடியில் நடந்த கலவரத்தில் அரசு ஆஸ்பத்திரி முன்பு பெட்ரோல் குண்டு வீசியது தொடர்பான வழக்கும், மில்லர்புரத்தில் 2 வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்ட வழக்கும் சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு உள்ளதாக உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News