செய்திகள்

நிபா வைரஸ் பீதி - கொடைக்கானலில் பிளம்ஸ் பழங்கள் விற்பனை சரிவு

Published On 2018-05-30 04:33 GMT   |   Update On 2018-05-30 04:33 GMT
கொடைக்கானலில் பிளம்ஸ் பழங்கள் விலை அதிகரித்ததுடன் நிபா வைரஸ் பீதி காரணமாக விற்பனையும் சரிந்தது. #NipahVirus

பெருமாள்மலை:

கொடைக்கானலில் ஏழைகளின் ஆப்பிள் என்று அழைக்கப்படும் பிளம்ஸ் பழங்கள் பெருமாள்மலை, பேத்துப்பாறை, வில்பட்டி, செண்பகனூர், அட்டுவம் பட்டி, மாட்டுப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஊடு பயிராக விளைவிக்கப்படுகிறது. ஏப்ரல், மே, ஜூன் ஆகிய 3 மாதங்கள் பிளம்ஸ் விளைச்சல் காலமாக உள்ளது.

இந்த மாதங்களில் கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகளின் வருகையும் அதிகமாக இருக்கும் என்பதால் அவர்கள் பிளம்ஸ் பழங்களை அதிக அளவு வாங்கி செல்வார்கள்.

மேலும் கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படும்.

கேரளாவில் கடந்த சில நாட்களாக நிபா வைரஸ் காரணமாக 14 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நோய்க்கு முக்கிய காரணமாக வவ்வால் என்று சொல்லப்பட்டாலும் பழங்களை சுத்தம் செய்து சாப்பிட வேண்டும் என்றும் விலங்குகள் கடித்த பழங்களை சாப்பிட வேண்டாம் எனவும் டாக்டர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.

பிளம்ஸ் பழங்களுக்கு மருந்து தெளிப்பதில்லை. இதனால் இயற்கையாக விளையக்கூடிய இப்பழங்களில் நிபா வைரஸ் தாக்க சாத்தியம் இல்லை.

இருந்தபோதும் கோடை மழை சமயத்தில் ஆலங்கட்டியுடன் மழை பெய்ததால் பழம் விளைச்சலில் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் விளைச்சல் குறைந்தது. இதன் காரணமாக ஒரு கிலோ ரூ.120-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது கடந்த வருடத்தில் விற்றதை விட 2 மடங்கு அதிகமாகும். விலை உயர்வு காரணமாகவும், நிபா வைரஸ் பீதியினாலும் கொடைக்கானல் வரும் சுற்றுலா பயணிகள் பிளம்ஸ் பழங்களை வாங்குவதை தவிர்த்தனர். இதனால் விவசாயிகள் மிகுந்த கவலை அடைந்தனர். #NipahVirus

Tags:    

Similar News