செய்திகள்

தேர்தல் விதிமீறல் வழக்கு: நேரு - 3 எம்.எல்.ஏ.க்கள் இன்று கோர்ட்டில் ஆஜர்

Published On 2018-05-25 17:11 GMT   |   Update On 2018-05-25 17:11 GMT
கடந்த 2016 சட்டமன்ற தேர்தலின் போது விதிமீறிய வழக்கில் கே.என்.நேரு, 3 எம்எல்ஏக்கள் திருச்சி கோர்ட்டில் ஆஜராகினர்.

திருச்சி:

கடந்த 2016 சட்டமன்ற தேர்தலின் போது தி.மு.க. வேட்பாளர் பட்டியல் மே மாதம் வெளியிடப்பட்டது. திருச்சி மாவட்டத்தில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்ட தி.மு.க. மாவட்ட செயலாளர் கே.என்.நேரு, மற்றும் மகேஷ் பொய்யாமொழி, சவுந்தரபாண்டியன், ஸ்டாலின்குமார், கணேசன் உள்ளிட்டவர்கள் சத்திரம் பஸ் நிலையத்தில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தனர்.

அப்போது அனுமதி பெறாமல் மாலை அணிவித்ததால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தியதாக கே.என்.நேரு உள்ளிட்ட 9 பேர் மீது கோட்டை போலீஸ் நிலையத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு திருச்சி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்த வழக்கில் கடந்த 4-ந்தேதி விசாரணை நடைபெற்ற போது தி.மு.க.வினர் ஆஜராகவில்லை. இன்று மீண்டும் விசாரணை நடை பெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இந்த வழக்கில் தொடர்புடைய முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, எம்.எல்.ஏக்கள் மகேஷ் பொய்யாமொழி, சவுந்திரபாண்டியன், ஸ்டாலின்குமார், வடக்கு மாவட்ட செலாளர் காடு வெட்டி தியாகராஜன், திருச்சி மாநகர செயலாளர் அன்பழகன், அப்போதைய வேட்பாளர்கள் பழனியாண்டி, கணேசன் ஆகியோர் ஆஜராகினர்.

அப்போது சாட்சிகள் விசாரணை முடிந்த நிலையில் வழக்கு தொடர்பாக என்ன கூறுகிறீர்கள் என்று கே. என்.நேரு உள்ளிட்டவர்களிடம் நீதிபதி கவுதமன் கேட்டார். அதற்கு அவர்கள் இதில் உண்மையில்லை என்று கூறினர்.

இதை தொடர்ந்து இந்த வழக்கில் விசாரணை வருகிற 30.5.2018 அன்று நீதிபதி கவுதமன் ஒத்தி வைத்தார். இன்று கே.என்.நேரு உள்ளிட்டவர்கள் ஆஜராக வந்த போது அவர்களுடன் முன்னாள் எம்.எல்.ஏக்கள் அன்பில் பெரியசாமி, கே. என்.சேகரன், வக்கீல்கள் பாஸ்கர், ஓம்.பிரகாஷ், தி.மு.க. பகுதி செயலாளர்கள் கண்ணன், மோகன்தாஸ், தர்மராஜ், இளங்கோவன், பாலமுருகன், முத்துசெல்வம், கிராப்பட்டி செல்வம், ராமதாஸ், வட்ட செயலாளர் நாகராஜ், மற்றும் பலர் உடன் வந்தனர். 

Tags:    

Similar News