செய்திகள்

திருக்கோவிலூர் அருகே தொண்டையில் மீன் சிக்கி தொழிலாளி பலி

Published On 2018-05-20 13:29 GMT   |   Update On 2018-05-20 13:29 GMT
திருக்கோவிலூர் அருகே தொண்டையில் மீன் சிக்கி தொழிலாளி இறந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருக்கோவிலூர்:

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள அருங்குறிக்கை கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாமலை (வயது 55), தொழிலாளி. இவர் அதே பகுதியை சேர்ந்த தனது நண்பர்கள் சிலருடன் சித்தலிங்கமடம் கிராமத்தில் உள்ள ஏரிக்கு சென்றார்.

பின்னர் அவர் ஏரியில் தூண்டில் மூலம் மீன் பிடித்து கொண்டிருந்தார். அப்போது அண்ணாமலையின் தூண்டிலில் மீன் ஒன்று சிக்கியது. இதையடுத்து அந்த மீனை எடுக்க அவர் முயன்றபோது தூண்டிலில் சிக்கிய மீன் வரவில்லை.

இதனால் அவர் அந்த மீனை தனது வாயில் கவ்விப் பிடித்துக் கொண்டு, தூண்டில் முள்ளை எடுக்க முயன்றார்.

அப்போது அண்ணாமலை தான் வாயில் கவ்வியிருந்த மீனை, எதிர்பாராதவிதமாக விழுங்கி விட்டார். இதில் அவரது தொண்டையில் மீன் சிக்கிக் கொண்டது. இதனால் அவர் மூச்சு திணறல் ஏற்பட்டு, மயங்கி விழுந்தார்.

இதனை பார்த்த அங்கிருந்த நண்பர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருக்கோவிலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருடைய தொண்டையில் இருந்த மீனை டாக்டர்கள் எடுக்க முயன்றனர். ஆனால் சிறிதுநேரத்தில் அண்ணாமலை பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்த புகாரின் பேரில் திருக்கோவிலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News