செய்திகள்

மின்சார ரெயில் தாமதம்: தாம்பரம் ரெயில் நிலையத்தில் பயணிகள் மறியல்

Published On 2018-05-05 12:41 IST   |   Update On 2018-05-05 12:41:00 IST
தாம்பரம் ரெயில் நிலையத்தில் மின்சார ரெயில் தாமதமாக வந்ததால் ஆத்திரம் அடைந்த பயணிகள் திடீரென தண்டவாளத்தில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

தாம்பரம்:

செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரை ரெயில் நிலையத்துக்கு அதிவிரைவு மின்சார ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் குறிப்பிட்ட ரெயில் நிலையங்களில் மட்டுமே நிற்கும்.

இதனால் காலை நேரங்களில் வேலைக்கு செல்வோர் இந்த அதிவிரைவு மின்சார ரெயிலை பயணம் செய்வது வழக்கம். இதனால் பயணிகள் கூட்டம் எப்போதும் இந்த ரெயிலில் நிரம்பி வழியும். இந்த நிலையில் கடந்த 3 வாரமாக அதிவிரைவு மின்சார ரெயில் தாமதமாக வந்தது. மேலும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தாம்பரம் வரை அதிவேக ரெயிலாக இயக்கப்பட்டு அதன் பிறகு சாதாரண மின்சார ரெயிலாக இயக்கப்பட்டது.

இதனால் வேலைக்கு செல்வோர் கடும் அவதிக்குள்ளார்கள். இதுபற்றி அவர்கள் ரெயில் நிலைய அதிகாரியிடம் புகார் செய்தனர். ஆனாலும் தொடர்ந்து மின்சார ரெயில் தாமதமாகவே வந்தது. இந்த நிலையில் இன்று காலை அதிவிரைவு மின்சார ரெயில் தாமதமாக தாம்பரம் ரெயில் நிலையத்துக்கு வந்தது. அப்போது ரெயில் நிலையத்தில் காத்திருந்த 100-க்கும் மேற்பட்ட பயணிகள் திடீரென தண்டவாளத்தில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

உடனே ரெயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து பயணிகளிடம் சமாதான பேச்சு நடத்தினார்கள். மின்சார ரெயில் தாமதமின்றி இயக்குவதாக தெரிவித்தனர். 

Similar News