செய்திகள்

குட்கா ஆலை முன்பு போராட்டம் நடத்தி கைதான தி.மு.க.வினர் ஜாமீனில் விடுதலை

Published On 2018-05-05 04:32 GMT   |   Update On 2018-05-05 04:32 GMT
குட்கா ஆலை முன்பு போராட்டம் நடத்தி கைதான தி.மு.க.வினர் 7 பேரும் இன்று ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர். அவர்களை தி.மு.க.வினர் வரவேற்றனர்.

கோவை:

கோவை சூலூர் அருகே உள்ள கண்ணம் பாளையத்தில் கடந்த வாரம் சட்ட விரோதமாக செயல்பட்டு வந்த குட்கா ஆலையில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதுபற்றி தெரியவந்ததும் சிங்காநல்லூர் தி.மு.க. எம்.எல்.ஏ. கார்த்திக் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த தி.மு.க. நிர்வாகிகள் ஆலை முன்பு திரண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இந்த நிலையில் பணி செய்யவிடாமல் தடுத்தது உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் தி.மு.க. எம்.எல்.ஏ. கார்த்திக் உள்பட 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இவர்களில் மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் தளபதி முருகேசன், சூலூர் தெற்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ், சுல்தான்பேட்டை ஒன்றிய செயலாளர் பரமசிவம், கண்ணம்பாளையம் நகர பொறுப்பாளர் சண்முகம், கோவை தெற்கு மாவட்ட துணைச் செயலாளர் கபிலன், இளைஞரணி சுரேஷ், ராவத்தூர் செல்வராஜ் ஆகிய 7 பேரை கைது செய்து கோவை சிறையில் அடைத்தனர். கார்த்திக் எம்.எல்.ஏ. உள்பட 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கார்த்திக் எம்.எல்.ஏ. ஜாமீன் கேட்டு கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். இதன் மீதான விசாரணை வருகிற 10-ந்தேதி நடக்கிறது.

இந்தநிலையில் கைது செய்யப்பட்ட தி.மு.க. வினர் 7 பேருக்கும் ஜாமீன் வழங்க வேண்டும் என தி.மு.க. சார்பில் வக்கீல் தண்டபாணி கடந்த 2-ந் தேதி சூலூர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

மனு மீதான விசாரணை நேற்று வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி வேடியப்பன் கைது செய்யப்பட்ட 7 பேருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

இதனையடுத்து சிறையில் அடைக்கப்பட்டு இருந்த தி.மு.க.வினர் 7 பேரும் இன்று ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர். அவர்களை தி.மு.க.வினர் வரவேற்றனர்.

Tags:    

Similar News