செய்திகள்

நாகை அருகே 2 மகன்களை கொன்று தாய் தற்கொலை முயற்சி

Published On 2018-05-04 05:07 GMT   |   Update On 2018-05-04 05:07 GMT
நாகை அருகே குடும்ப தகராறில் 2 மகன்களை கொன்று தாய் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கீழ்வேளூர்:

நாகை வெளிப்பாளையம் வாய்க்காங்கரை தெருவை சேர்ந்தவர் முருகானந்தம் (வயது 40). இவர் நாகையில் உள்ள ஒரு கடையில் டெய்லராக வேலைப்பார்த்து வருகிறார். இவரது மனைவி அஜந்தா (வயது 33) இவர்களுக்கு ஹரிசங்கரன் (13), வசந்தகுமார் (11) என்ற 2 மகன்கள் உள்ளனர்.

ஹரிசங்கரன் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 7-ம் வகுப்பும், வசந்தகுமார் 5-ம் வகுப்பும் படித்து வருகின்றனர்.

இந்த நிலையில் முருகானந்ததுக்கும் அஜந்தாவுக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு குடும்ப தகராறு ஏற்பட்டது. மேலும் இரு மகன்களையும் வேறொரு பள்ளியில் சேர்ப்பது குறித்தும் இருவருக்கும் இடையே கருத்து ஏற்பாடு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் நேற்று முருகானந்தம் வழக்கம்போல் வேலை முடிந்து இரவு 11 மணியளவில் வீடு திரும்பினார். அப்போது வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது.

நீண்ட நேரமாக சத்தம் கொடுத்தும் மனைவி அஜந்தா கதவை திறக்காததால் அவர் சந்தேகம் அடைந்தார். இதனால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது மனைவியும், 2 மகன்களும் வி‌ஷம் குடித்த நிலையில் மயங்கி கிடந்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கதறி அழுதார். அப்போது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்தனர். அவர்கள் உடனே மயங்கி கிடந்த 3 பேரையும் மீட்டு ஆஸ்பத் திரிக்கு கொண்டு செல்ல ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர்.

அப்போது ஹரிசங்கரன், வசந்தகுமார் ஆகியோர் ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது. மயங்கிய நிலையில் இருந்த அஜந்தாவை மீட்டு திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் பற்றி நாகை வெளிப்பாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர். வி‌ஷம் குடித்து பலியான ஹரிசங்கரன், வசந்தகுமார் ஆகியோர் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

2 மகன்களை கொன்று தாய் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News