செய்திகள்

வியாபாரி மீது பொய் வழக்கு - சப்-இன்ஸ்பெக்டருக்கு ரூ.1 லட்சம் அபராதம்

Published On 2018-04-24 08:17 GMT   |   Update On 2018-04-24 08:17 GMT
காஞ்சிபுரத்தில் வியாபாரி மீது பொய் வழக்குப் பதிவு செய்த ஓய்வுப்பெற்ற சப்-இன்ஸ்பெக்டருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து மனிதஉரிமை ஆணையம் உத்தரவிட்டது.
காஞ்சீபுரம்:

காஞ்சீபுரம், மேட்டுத்தெருவை சேர்ந்தவர் மனோகரன். கடந்த 2007-ம் ஆண்டு அதே பகுதியில் ‘ஸ்வீட் ஸ்டால்’ கடை நடத்தி வந்தார்.

கடைக்கு இனிப்பு, பலகாரம் தயார் செய்ய அதே பகுதியில் சென்னையை சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவருக்கு சொந்தமான இடத்தை குத்தகைக்கு எடுத்து இருந்தார்.

இந்த நிலையில் மனோகரன், தனது நண்பரான அதே பகுதியைச் சேர்ந்த ஏகாம்பரம் என்பவரிடம் குத்தகைக்கு எடுத்துள்ள இடத்தினை விலைக்கு வாங்க விரும்புவதாகவும் இது குறித்து பாலசுப்பிரமணியத்திடம் பேசும்படியும் கூறினார்.

சில நாட்கள் கழித்து வந்த ஏகாம்பரம், அந்த இடத்தினை பாலசுப்பிரமணியன் தனக்கு விற்று விட்டதாகவும் எனவே உடனடியாக இடத்தினை காலி செய்யும்படியும் மனோகரனிடம் கூறியுள்ளார். மேலும் கடையில் உள்ள பொருட்களையும் சேதப்படுத்தியதாக தெரிகிறது.

இது குறித்து சின்னகாஞ்சீபுரம் போலீசில் மனோகரன் புகார் செய்தார். இதையடுத்து ஏகாம்பரத்தை அழைத்து சப்-இன்ஸ்பெக்டராக இருந்த மாரியப்பன் விசாரணை நடத்தினார்.

அப்போது, வீட்டில் இருந்த தனது மனைவியை பாலியல் ரீதியாக மனோகரன் துன்புறுத்தியதாக தெரிவித்தார். இதுபற்றி மனோகரன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தன.

இந்த நிலையில் மனோகரன், எந்த தவறும் செய்யாத என்னை சிறையில் அடைத்துடன், மனித உரிமை மீறலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னையில் உள்ள மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்தார்.

வழக்கினை விசாரித்த நீதிபதி சித்தரஞ்சன் மோகன்தாஸ், புகார் தாரரின் வழக்கினை முறையாக விசாரிக்காமல் ஒரு தரப்புக்கு ஆதரவாக செயல்பட்ட தற்போது ஓய்வு பெற்றுள்ள சப்-இன்ஸ்பெக்டர் மாரியப்பனுக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் வித்தார்.

மேலும் இத்தொகையினை எட்டு வாரத்திற்குள் மனுதாரருக்கு தமிழக அரசு வழங்க வேண்டும். அந்தத் தொகையினை ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் மாரியப்பனிடம் இருந்து பெற்றுக் கொள்ளலாம் என்று தீர்ப்பளித்தார்.
Tags:    

Similar News