செய்திகள்

தமிழக-கர்நாடக மாநில எல்லையில் ரஜினி-கமல்ஹாசனை கண்டித்து கன்னட அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

Published On 2018-04-13 12:50 IST   |   Update On 2018-04-13 12:50:00 IST
கர்நாடகத்துக்கு எதிராக பேசும் ரஜினி, கமல்ஹாசனை கண்டித்து கன்னட அமைப்பினர் தமிழக-கர்நாடக மாநில எல்லையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தாளவாடி:

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என தமிழகத்தில் அனைத்து கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் தமிழகத்துக்கு எதிராக தமிழக கர்நாடக எல்லையில் கன்னட அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் கன்னட சேனா படை அமைப்பின் மாவட்ட தலைவர் சீனிவாசன் தலைமையில் 17 பேர் சாம்ராஜ்நகரில் இருந்து ஊர்வலமாக வந்தனர்.

தமிழக-கர்நாடக எல்லையான புளிஞ்சூர் சோதனைச் சாவடியில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பின்னர் தமிழக எல்லையில் நுழைய முயன்ற போது கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் டி.எஸ்.பி. ஜெயகுமார் தலைமையில் போலீசார் கைது செய்தனர்.

அப்போது அமைப்பின் மாவட்டத் தலைவர் சீனிவாசன் கூறியதாவது:-

கர்நாடகத்துக்கு எதிராக பேசும் ரஜினி, கமலை கர்நாடகத்துக்குள் நுழைய விடமாட்டோம். காவிரி நீர் கன்னட நாட்டுக்குதான் சொந்தம். கமல், ரஜினி படத்தை கர்நாடகத்தில் திரையிட அனுமதிக்கமாட் டோம். இதனை எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

காவிரி விவகாரத்தில் தமிழகம் தலையிடுவதை எதிர்க்கிறோம். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தமிழக அரசு நிர்ப்பந்திக்கக்கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

இரு மாநில எல்லையில் நடந்த இந்த போராட்டத்தால் இரு மாநில போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.பாதுகாப்பு கருதி ஆசனூர் சோதனைச்சாவடியில் தமிழக-கர்நாடக இடையே போக்குவரத்தை தடை செய்தனர். 1 மணி நேரத்திக்கு பிறகு போக்குவரத்து சீரானது. இந்த போரட்டதால் தமிழக-கர்நாடக எல்லையில் பரபரப்பு நிலவியது. #tamilnews

Similar News