செய்திகள்
கனி மார்க்கெட் ஜவுளி சந்தை இன்று மந்தமாக காணப்பட்டது.

ஈரோடு ஜவுளி மார்க்கெட்டுக்கு வெளி மாநில வியாபாரிகள் வருகை குறைந்தது

Published On 2018-04-11 13:17 IST   |   Update On 2018-04-11 13:17:00 IST
காவிரிநீர் போராட்டம் எதிரொலியாக ஈரோடு ஜவுளி மார்க்கெட்டுக்கு வெளி மாநில வியாபாரிகள் வருகை பெருமளவில் குறைந்தது.
ஈரோடு:

ஈரோடு கனி மார்க்கெட் ஜவுளி சந்தைக்கு ஈரோடு மாவட்டம் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மேலும் கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற வெளி மாநில வியாபாரிகள் வருவார்கள்.

இவர்கள் மொத்தமாகவும், சில்லரையாகவும் தங்களுக்கு தேவையான ஜவுளிகளை வாங்கி கொண்டு செல்வார்கள்.

மேலும் உள்ளூர் பொது மக்களும் மலிவான விலைக்கு ஜவுளிகள் வாங்க கனி மார்க்கெட் ஜவுளி சந்தைக்கு வருவார்கள்.

இதனால் கனி மார்க்கெட் ஜவுளி சந்தை காலை நேரத்திலேயே பரபரப்பாக காணப் படும். ஆனால் கடந்த சில நாட்களாக ஜவுளி சந்தையில் வியாபாரம் மிகவும் மந்தமாகவே உள்ளது. வெளியூர், மற்றும் வெளி மாவட்ட, வெளி மாநில வியாபாரிகள் வருகையும் மிகவும் குறைந்து உள்ளது.

இது குறித்து ஜவுளி சந்தை வியாபாரிகளிடம் கேட்ட போது, ‘‘காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகிறது. இதனால் வெளி மாநில வியாபாரிகள் வருகை மிகவும் குறைந்து விட்டது. இதே போல் வெளியூர் வியாபாரிகள் வரத்தும் கணிசமாக குறைந்து விட்டது. கோடை கால ஜவுளிகள் வந்து குவிந்து உள்ளது. ஆனால் வியாபாரம் சூடு பிடிக்கவில்லை‘‘ என்று வேதனையுடன் கூறினர்.

மேலும் பல வியாபாரிகள் கூறும் போது, வழக்கம் போல் 60 சதவீத வியாபாரம் நடக்கும். ஆனால் இன்று 20 சதவீத வியாபாரம் கூட நடக்கவில்லை என்று கூறினர்.


Similar News