செய்திகள்

கமல்ஹாசன் பேனரை கிழித்த மக்கள் நீதி மய்யம் தொண்டர்கள்

Published On 2018-03-28 03:48 GMT   |   Update On 2018-03-28 03:48 GMT
செங்குன்றத்திற்கு அறிவித்தபடி மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வராததால், ஆத்திரம் அடைந்த அவரது கட்சி தொண்டர்கள் பேனர்களை கிழித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
செங்குன்றம்:

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் உள்ள ஒரு கல்லூரியில் நேற்று நடந்த விழாவில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கலந்து கொண்டு பேசினார். முன்னதாக திருவள்ளூர் மாவட்ட நிர்வாகிகளையும், பொதுமக்களையும் அவர் சந்திக்கப்போவதாக அறிவிக்கப்பட்டது.

செங்குன்றம் பஸ் நிலையத்தில் வாகனத்தில் நின்றபடி கமல்ஹாசன் பேச இருப்பதாக கூறப்பட்டது.

இதையடுத்து கமல்ஹாசனை வரவேற்பதற்காக சோழவரம் ஒன்றிய நிர்வாகிகள் நேற்று முன்தினம் இரவு முழுவதும் கண்விழித்து செங்குன்றம் சாமியார் மடத்தில் இருந்து திருவள்ளூர் கூட்டு சாலை வரை டிஜிட்டல் பேனர்கள் வைத்தனர். மேலும் செங்குன்றம் பஸ் நிலையம் அருகேயும் பெரிய பேனர்கள் வைக்கப்பட்டன.

இதுகுறித்து ஒன்றிய, நகர நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்ததால் கமல்ஹாசனை பார்க்க ஆர்வத்துடன் ஏராளமானவர்கள் நேற்று செங்குன்றம் பஸ் நிலையத்தில் காத்திருந்தனர். இந்த நிலையில் கமல்ஹாசன் நேற்று செங்குன்றம் வராமல் மணலி 200 அடி சாலை மீஞ்சூர் வழியாக பொன்னேரிக்கு சென்றார்.

கமல்ஹாசன் செங்குன்றத்திற்கு வராததால், ஆத்திரம் அடைந்த மக்கள் நீதி மய்யம் கட்சி தொண்டர்கள் ஆவேசம் அடைந்து தாங்கள் வைத்திருந்த வரவேற்பு பேனர்களை கத்தியால் கிழித்தனர்.

மேலும் அவர்கள் கமல்ஹாசனை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். தகவல் அறிந்த செங்குன்றம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. #tamilnews 
Tags:    

Similar News