செய்திகள்
ஸ்ரீஜா

ஆதரவாக இருந்த வாலிபரின் பிரிவால் தற்கொலை செய்கிறேன்: 2 மகனை கொன்ற பெண் எழுதிய கடிதம்

Published On 2018-01-30 09:45 IST   |   Update On 2018-01-30 09:45:00 IST
ஈரோட்டில் ஆதரவாக இருந்த வாலிபரின் பிரிவை தாங்கமுடியாததால் 2 மகன்களை கொன்று தற்கொலை செய்து கொள்வதாக பெண் எழுதிய கடிதத்தை போலீசார் கைப்பற்றினர்.
ஈரோடு:

ஈரோடு சம்பத் நகரை சேர்ந்தவர் ஸ்ரீஜா (வயது 32). ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் வரவேற்பாளராக பணிபுரிந்து வந்தார்.

இவரது கணவர் ரவீந்திரன் கடந்த 3 ஆண்டுக்கு முன் இறந்து விட்டார். பிரனீத் (8), சதீஸ் (4) என்ற 2 மகன்கள் இருந்தனர்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்து வந்த ஸ்ரீஜா நேற்று முன்தினம் தனது 2 மகன்களை வி‌ஷ ஊசிபோட்டு கொலை செய்தார்.

பிறகு ஸ்ரீஜாவும் தனக்குத்தானே வி‌ஷ ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம் ஈரோடு நகரில் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியது. இது குறித்து ஈரோடு வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

போலீசார் நடத்திய விசாரணையில் ஸ்ரீஜா பணிபுரியும் ஆஸ்பத்திரியில் வேலை பார்த்த ஒரு வாலிபரை காதலித்து வந்ததாகவும் அவர் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய முடிவு செய்ததால் ஸ்ரீஜா இந்த விபரீத முடிவை எடுத்ததாக தெரிய வந்தது.

போலீசார் மேலும் தொடர்ந்து விசாரணை நடத்தியதில் தற்கொலை செய்வதற்கு முன் ஸ்ரீஜா எழுதி வைத்து உள்ள ஒரு பக்க கடிதம் சிக்கி உள்ளது.

அந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றி உள்ளனர்.

அந்த கடிதத்தில் ஸ்ரீஜா எழுதி இருப்பதாவது:-

என் கணவர் மறைவுக்குப் பிறகு நான் பணிபுரியும் ஆஸ்பத்திரியில் வேலை பார்க்கும் ஒருவரிடம் பழக்கம் ஏற்பட்டது. இதுவே நாளடைவில் எங்களுக்குள் நெருக்கத்தை ஏற்படுத்தியது.

இருவரும் கணவன்- மனைவி போல் வாழ்ந்து வந்தோம். இந்த நிலையில் அவருக்கு திருமண ஏற்பாடு நடந்தது. அவர் என்னை விட்டு பிரிந்து விடுவதை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. அவரது ஆதரவு தொடர்ந்து கிடைக்காததால் தற்கொலை செய்ய முடிவு செய்தேன். நான் இறந்த பிறகு என் பிள்ளைகள் அனாதையாகி விடக்கூடாது என நினைத்து அவர்களை வி‌ஷ ஊசி போட்டு என்னுடனேயே அழைத்து கொண்டு போகிறேன்.

இவ்வாறு ஸ்ரீஜா அந்த கடிதத்தில் எழுதி உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். #Tamilnews

Similar News