செய்திகள்

வேலூர்- திருவண்ணாமலை மாவட்டத்தில் தி.மு.க.வினர் சாலை மறியல்: துரைமுருகன்-எ.வ.வேலு கைது

Published On 2018-01-29 11:32 IST   |   Update On 2018-01-29 13:03:00 IST
பஸ் கட்டண உயர்வை கண்டித்து வேலூர்- திருவண்ணாமலை மாவட்டத்தில் தி.மு.க.வினர் சாலை மறியல் ஈடுப்பட்டனர். இது தொடர்பாக துரைமுருகன் உள்பட திமு.க.வினரை போலீசார் கைது செய்தனர்.#BusFareHike

வேலூர்:

பஸ் கட்டண உயர்வுக்கு எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. கடந்த 2 நாட்களுக்கு முன்பு திமு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இன்று மறியல் போராட்டம் அறிவித்தனர். அதன்படி வேலூர் திருவண்ணாமலை மாவட்டத்தில் தி.மு.க. உள்ளிட்ட அனைத்து கட்சிகள் சார்பில் சாலை மறியல் செய்தனர்.

காட்பாடி சித்தூர் பஸ் நிறுத்தம் அருகே தி.மு.க. முதன்மை செயலாளர் முன்னாள் அமைச்சர் துரைமுருகன் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். நகர செயலாளர் வன்னிய ராஜா உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பஸ் கட்டண உயர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என கோ‌ஷம் எழுப்பினர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காட்பாடி போலீசார் துரைமுருகன் உள்பட திமு.க.வினரை கைது செய்தனர்.

வேலூர் அண்ணா சாலையில் தி.மு.க. மத்திய மாவட்ட செயலாளர் நந்த குமார் எம்.எல்.ஏ., மாநகர செயலாளர் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீ சார் கைது செய்தனர்.

ராணிப்பேட்டை முத்துக் கடையில் வேலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் காந்தி எம்.எல்.ஏ. தலைமையில் ஏராளமான தி.மு.க.வினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பஸ் கட்டண உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து கோ‌ஷம் எழுப்பினர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ராணிப்பேட்டை போலீ சார் காந்தி எம்.எல்.ஏ. உள்பட 100க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.

திருப்பத்தூர் அருகே உள்ள மாடப்பள்ளி கிராமத்தில் நல்லதம்பி எம்.எல்.ஏ. தலைமையில் ஆலங்காயம் சாலையில் மறியல் செய்தனர்.

இதில் 100-க்கும் மேற்பட்ட திமுக.வினர் கலந்து கொண்டு கோ‌ஷம் எழுப்பினர். திருப்பத்தூர் தாலுகா போலீசார் நல்ல தம்பி எம்.எல்.ஏ. உள்பட 100-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.

திருப்பத்தூர் புதிய பஸ் நிலையம் அருகே நகர செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் சாலை மறியல் செய்தனர். திருப்பத்தூர் புதுப்பேட்டை கூட்ரோட்டில் மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் மோகன் தலைமையில் சாலை மறியல் செய்தனர். இதில் முன்னாள் நகர மன்ற தலைவர் அரசு, அண்ணா அருணகிரி, துணை அமைப்பாளர் கார்த்திக் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். அவர்களை திருப்பத்தூர் டவுன் போலீசார் கைது செய்தனர்.

கந்திலி மெயின் ரோட்டில் ஒன்றிய செயலாளர்கள் அன்பழகன், ராஜமாணிக்கம் ஆகியோர் தலைமையில் சாலை மறியல் செய்தனர்.

திருவண்ணாமலை பெரியார் சிலை அருகே தெற்கு மாவட்ட செயலாளர் எ.வ.வேலு எம்.எல்.ஏ. தலைமையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 500-க்கும் மேற்பட்ட தி.மு.க.வினர் பங்கேற்றனர். போராட்டத்தால் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

திருவண்ணாமலை டவுன் போலீசார் எ.வ.வேலு உள்பட தி.மு.க.வினரை கைது செய்தனர்.#BusFareHike #tamilnews

Similar News