ஹெல்மெட் அணிந்து பஸ் ஓட்டிய டிரைவர் இன்று கண்டக்டரானார்
கோபி:
ஈரோடு மாவட்டத்திலும் அரசு போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம் இன்று 5-வது நாளாக தொடர்கிறது.
போராட்டத்தில் பங்கேற்காமல் இயக்கப்படும் அரசு பஸ்கள் மீது சில இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.
எனவே போராட்டத்தில் பங்கேற்காமல் பஸ்களை இயக்கும் டிரைவர்கள் பாதுகாப்பாக இயக்கி வருகிறார்கள்.
கோபி அரசு போக்குவரத்து பணிமனையில் பணிபுரியும் அண்ணா தொழிற்சங்க டிரைவரான எஸ்.எஸ். சிவக்குமார் ஹெல்மெட் அணிந்து பணியில் ஈடுபட்டார்.
கோவையில் இருந்து கோபிக்கு வந்த பஸ்சில் அவர் ஹெல்மெட் அணிந்து வந்ததை பயணிகள் வித்தியாசமாக பார்த்தனர்.
இந்த நிலையில் இன்று அவர் கண்டக்டராக மாறினார். ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக கண்டக்டர் பற்றாக்குறை ஏற்பட்டது.
எனவே வேலைக்கு வந்திருந்த டிரைவர் எஸ்.எஸ். சிவக்குமார் இன்று ஈரோடு- சத்தியமங்கலம் செல்லும் பஸ்சில் கண்டக்டர் வேலை பார்த்தார்.
கோபி பஸ் நிலையத்தில் கண்டக்டர் பையை தோளில் தொங்கவிட்டபடி எஸ்.எஸ் சிவக்குமார் பயணிகளுக்கு டிக்கெட் கொடுத்ததை பார்த்த மக்கள் அவரை பற்றி பரபரப்பாக பேசிக் கொண்டனர்.
அந்த பஸ்சில் தற்காலிக ஊழியர் ஒருவர் டிரைவராக பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. #tamilnews