செய்திகள்

ஈரோடு மாவட்டத்தில் அரசு பஸ்கள் 86 சதவீதம் ஓடவில்லை - தனியார் பஸ்கள் சேவை அதிகரிப்பு

Published On 2018-01-06 11:27 IST   |   Update On 2018-01-06 11:27:00 IST
போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம் இன்று 3-வது நாளாக நீடிப்பதால் ஈரோடு மாவட்டத்தில் அரசு பஸ்கள் 86 சதவீதம் ஓடவில்லை.

ஈரோடு:

ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். நேற்று முன்தினம் மாலை முதலே வேலை நிறுத்த போராட்டத்தில் குதித்தனர்.

நேற்று 2-வது நாளாக போராட்டம் தீவிரம் அடைந்தது. ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 833 அரசு பஸ்கள் உள்ளன. இதில் 750 பஸ்கள் நேற்று இயங்கவில்லை. இதனால் மக்கள் அவதி அடைந்தனர்.

இன்றும் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம் 3-வது நாளாக நீடித்தது. மாவட்டத்தில் இன்று 833 பஸ்களில் 112 பஸ்கள் அதாவது 14 சதவீத பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

மக்கள் பாதிக்காத வகையில் பஸ்களை இயக்க மாவட்ட போக்குவரத்து கழகம் மாற்று ஏற்பாடுகளை செய்து வருகிறது. அண்ணா தொழிற்சங்க ஊழியர்கள், தற்காலிக ஓட்டுனர்களை கொண்டு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

குறைந்த அளவே அரசு பஸ்கள் இயக்கப்பட்டதால் இன்றும் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்வோர் பஸ்கள் கிடைக்காமல் பாதிக்கப்பட்டனர்.

ஈரோடு பஸ் நிலையத்தில் இன்றும் காலை பள்ளிக்கு செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்லும் பணியாளர்கள் என பலர் பஸ்கள் கிடைக்காமல் காத்திருந்தனர். பலர் தனியார் பஸ்களில் பயணம் செய்தனர்.

அரசு பஸ்கள் ஸ்டிரைக்கை தொடர்ந்து ஈரோட்டில் தனியார் பஸ்களின் சேவை வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. இன்று தனியார் பஸ்கள் ஈரோட்டில் இருந்து பல்வேறு பகுதிக்கு அதிக எண்ணிக்கையில் இயக்கப்பட்டன.

ஈரோடு பஸ் நிலையத்தில் இருந்து சேலம், கோவைக்கு அதிகளவில் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டன. பஸ்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. கல்லூரி மாணவர்கள், பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் பஸ்சின் படிக்கட்டில் தொங்கி கொண்டு பயணம் செய்வதை காண முடிந்தது.

86 சதவீத பஸ்கள் இயக்கப்படாதால் சென்னிமலை ரோட்டில் அரசு பஸ் டெப்போவில் பஸ்கள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அங்கு தாலுகா இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சேகர் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதே போல் ஈரோடு பஸ் நிலையத்தில் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயன் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுடன் அதிவிரைவு படை போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

போராட்டம் குறித்து ஈரோடு போக்குவரத்து தொழில் சங்கத்தினர் கூறும் போது, ‘‘எங்கள் நியாயமான கோரிக்கைகளை அரசு ஏற்காததால் தான் நாங்கள் வேலை நிறுத்த போராட்டத்திற்கு தள்ளப்பட்டோம்.

ஈரோடு மாவட்டத்தில் இன்று 3-வது நாளாக எங்கள் போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது. எங்கள் போராட்டம் குறித்து உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. எங்கள் தரப்பு கோரிக்கைகளையும், வாதத்தையும் வரும் திங்கட்கிழமை நீதிமன்றத்தில் எடுத்து கூறி முறையிடுவோம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Similar News