கோவையில் இருந்து கோபிக்கு ஹெல்மெட் அணிந்தபடி அரசு பஸ் ஓட்டிய டிரைவர்
கோபி:
தமிழகம் முழுவதும் அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர். ஈரோடு மாவட்டத்திலும் இந்த போராட்டம் நீடித்து வருகிறது.
கோபி போக்குவரத்துக் கழக பணிமனையில் 80 அரசு பஸ்கள் உள்ளன. இன்று மொத்தம் 50 பஸ்கள் இயக்கப்பட்டன.
இந்த பஸ்கள் சத்தியமங்கலம், ஈரோடு, கோவை, பவானி, திருப்பூர், மதுரை, புளியம்பட்டி உள்பட பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்பட்டன. பயணிகளும் அதிக அளவில் பஸ்களில் செல்ல வந்திருந்தனர்.
இந்த நிலையில் இன்று காலை 8.45 மணிக்கு கோவையில் இருந்து புறப்பட்ட அரசு பஸ் கோபி பஸ் நிலையத்துக்குள் வந்தது. அந்த பஸ்சின் டிரைவர் எஸ்.எஸ்.சிவக்குமார் ஹெல்மெட் அணிந்திருந்தார்.
அண்ணா தொழிற்சங்கத்தை சேர்ந்த அவர் நேற்று முதல் கோவைக்கு பஸ் இயக்கி வருகிறார். ஹெல்மெட் அணிந்தபடி பஸ் இயக்கியது ஏன்? என்று சிவக்குமாரிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-
அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின் போராட்டத்துக்கு நடுவே நான் பஸ்சை இயக்கி வருகிறேன். எனவே என்னை யாரும் தாக்கி விடக்கூடாது என்பதற்காகவே நான் ஹெல்மெட் அணிந்தபடி பஸ்சை இயக்கி வந்தேன்.
நான் ஹெல்மெட் அணிந்து வந்ததை மக்கள் வித்தியாசமாக பார்த்தனர். கோவை பஸ் நிலையம், கருமத்தம்பட்டி அருகே உள்ள சுங்கச்சாவடி ஆகிய இடங்களில் மக்கள் என்னை செல்போனில் படம் பிடித்தனர்.
இவ்வாறு அவர் கூறினார். #tamilnews