செய்திகள்

பசுபதீஸ்வரர் கோவிலில் 6 சிலைகள் மாயம்: அறநிலையத்துறை இணை இயக்குனர் உள்பட 2 பேர் கைது

Published On 2017-11-30 05:00 GMT   |   Update On 2017-11-30 05:00 GMT
பந்தநல்லூர் பசுபதீஸ்வரர் கோவிலில் 6 சிலைகள் மாயமானது தொடர்பாக அறநிலையத்துறை இணை இயக்குனர், முன்னாள் செயல் அலுவலரை போலீசார் கைது செய்தனர்.
கும்பகோணம்:

கும்பகோணம் அருகே பந்தநல்லூர் பசுபதீஸ்வரர் கோயில் 1000 ஆண்டுகள் பழமையானது. இந்த கோயில் சோழர்காலத்தில் கட்டப்பட்டது. பந்தநல்லூரை சுற்றியுள்ள 73 கிராமங்களில் உள்ள கோவில்களில் உள்ள பழமையான, ஐம்பொன் சிலைகள், வெண்கல சிலைகள் ஆகியவை பாதுகாப்பினை கருதி பசுபதீஸ்வரர் கோவிலில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கொண்டு வந்து வைத்தனர்.

பின்னர் அந்த கோவில்களில் திருவிழாக்கள் நடைபெறும் போது சிலைகள் எடுத்துச் செல்லப்பட்டு மீண்டும் கொண்டு வந்து வைக்கப்படுவது வழக்கம்.

இந்நிலையில் கடந்த 2013- ம் ஆண்டு இந்து சமய அறநிலையத்துறையினர் சிலைகளை கணக்கு எடுத்தனர். அப்போது கோவில் வைக்கப்பட்டு இருந்த கீழமணக்குடி விஸ்வநாதசுவாமி கோயிலுக்குரிய விநாயகர், புஷ்பகரணி, வள்ளி தெய்வாணை, சந்திரசேகரஅம்மன் சிலைகளும், ஸ்ரீரெங்கராஜபுரம் இடும்பேஸ்வரர் கோவிலுக்குரிய விநாயகர் சிலை என மொத்தம் 6 சிலைகள் மாயமானது.

இந்த சிலைகள் மாயமானது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறையின் அதிகாரிகள், கோவில் பணியாளர்கள் என 10 பேர் மீது பந்தநல்லூர் போலீசாரும், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரும் கடந்த ஆகஸ்ட் மாதம் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இந்நிலையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏ.டி.எஸ்.பி டி.குமார் தலைமையிலான போலீசார் கடந்த சில நாட்களுக்கு முன்பு 6 சிலைகள் மாயமானது தொடர்பாக கோவில் முன்னாள் செயல் அலுவலராக இருந்த ராமச்சந்திரன் (63), கோவில் தலைமை எழுத்தர் பந்தநல்லூரைச் சேர்ந்த ராஜா (37)2 பேரையும் கைது செய்தனர்.

இதற்கிடையே சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரின் தீவிர விசாரணையில் இந்து சமய அறநிலையத்துறை இணை இயக்குனர் கஜேந்திரன், மற்றும் கோவிலின் முன்னாள் செயல் அலுவலர் காமராஜ் ஆகியோருக்கும் தொடர்பு இருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து கும்பகோணத்தில் இருந்த கஜேந்திரன், காமராஜ் ஆகியோரை நேற்று சிலைகள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

பின்னர் கைது செய்யப்பட்ட அறநிலையத்துறை இணை இயக்குனர் கஜேந்திரன், முன்னாள் செயல் அலுவலர் காமராஜ் ஆகியோரை கும்பகோணம் நீதிபதிகள் குடியிருப்புக்கு சென்று நீதிபதி முன்பு இன்று காலை ஆஜர்படுத்தினர். அவர்கள் 2 பேரையும் 15 நாட்கள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர்களை போலீசார் பலத்த மாதுகாப்புடன் திருச்சிக்கு கொண்டு சென்று மத்திய சிறையில் அடைத்தனர்.
Tags:    

Similar News