செய்திகள்

சென்னை கடலில் செத்து மிதக்கும் மீன்கள்: மீனவர்கள் அச்சம்

Published On 2017-11-28 15:02 IST   |   Update On 2017-11-28 15:03:00 IST
சென்னை கடலில் மடவை, ஜிலேபி உள்ளிட்ட பல வகை மீன்கள் அதிகளவில் செத்து கரை ஒதுங்கியதால் மீனவர்கள் அச்சத்தில் உள்ளனர்.

சோழிங்கநல்லூர்:

சென்னை பெசன்ட் நகர் ஊரூர் குப்பம் முகத்துவாரம் பகுதியில் இன்று காலை ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீன்கள் செத்து கரை ஒதுங்கியுள்ளது.

இதை அறிந்த அப்பகுதி மக்கள் விரைந்து சென்று பார்த்தபோது மடவை, ஜிலேபி உள்ளிட்ட பல வகை மீன்கள் அதிகளவில் செத்து கரை ஒதுங்கியிருந்தது.

கடற்கரையோரம் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு இந்த மீன்கள் செத்து மிதக்கின்றன.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், “கூவம் ஆற்று நீர் கடலில் கலக்கும் இந்த முகத்துவாரம் பகுதியில், ரசாயனம் கலந்த கூவம் நீர் கடலில் கலந்ததால் மீன்கள் இறந்ததா? அல்லது சுனாமி அறிகுறியா? என்ற அச்சத்தில் மீனவர்கள் உள்ளனர்.

மீன்வளத்துறை அமைச்சகம் உடனடியாக தலையிட்டு இறந்த மீன்களை அப்புறப்படுத்தி நோய் தொற்று ஏற்படாமல் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மீன்கள் இறந்தது குறித்த காரணத்தை கண்டறிய வேண்டும்” என்றனர்.

இதே போல் சென்னை பட்டினப்பாக்கம், சீனிவாசபுரம் கடல் முகத்துவார பகுதியிலும் இன்று ஏராளமான மீன்கள் செத்து மிதந்தன.

Similar News