செய்திகள்

ஜெயலலிதா மீது அவதூறு: விஜயகாந்த் மீதான வழக்கு டிசம்பர் 13-ந் தேதிக்கு ஒத்திவைப்பு

Published On 2017-11-02 15:48 IST   |   Update On 2017-11-02 15:48:00 IST
தஞ்சையில் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் மீதான அவதூறு வழக்கு வரும் டிசம்பர் 13-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

தஞ்சாவூர்:

கடந்த 2012-ம் ஆண்டு ஆக.10-ந்தேதி தஞ்சை ஆப்ரகாம் பண்டிதர் ரோட்டில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பிறந்தநாளை ஒட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. இதில் கலந்து கொண்ட விஜயகாந்த் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா பற்றியும், தமிழக அரசு பற்றியும் அவதூறாக பேசியதாக அரசு வக்கீல் குப்புசாமி தஞ்சை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதேபோல் கபிஸ்தலத்தில் தே.மு.தி.க. பொதுக்கூட்டத்தில் ஜெயலலிதா மற்றும் தமிழக அரசு பற்றி அவதூறாக பேசியதாக கட்சியின் தலைமை நிலைய செயலாளர் பார்த்தசாரதி, தலைமைக்கழக பேச்சாளர் ஜெயக்குமார் ஆகிய 2 பேர் மீதும் இதே கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்குகள் மீதான விசாரணையை இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி நக்கீரன் வழக்குகளை வருகிற டிசம்பர் 13-ந்தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். வழக்கில் கட்சியின் தலைமை நிலைய செயலாளர் பார்த்தசாரதி சார்பாக வக்கீல்கள் மாதவன், செந்தில்குமார் ஆகியோர் ஆஜராகி மனு தாக்கல் செய்தனர்.

Similar News