செய்திகள்

சர்க்கரை விலையை தமிழக அரசு உயர்த்தியது ஏற்புடையதல்ல: வானதி சீனிவாசன்

Published On 2017-10-30 12:02 GMT   |   Update On 2017-10-30 12:02 GMT
பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் சர்க்கரையின் விலையை தமிழக அரசு உயர்த்தியது ஏற்புடையதல்ல என்று பாரதிய ஜனதா மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் கூறினார்.
கள்ளக்குறிச்சி:

விழுப்புரம் மேற்கு மாவட்ட பாரதிய ஜனதா செயற்குழு கூட்டம் கள்ளக்குறிச்சியில் நடந்தது. கூட்டத்தில் கலந்து கொண்ட அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக அரசு பயிர் காப்பீட்டு திட்டத்தின் பயன்களை விவசாயிகளுக்கு முறையாக அமல்படுத்தவில்லை. மத்திய அரசு தமிழகத்துக்கு நிதி அதிகமாக வழங்கியுள்ளது. அதனை தமிழக அரசு முறையாக செயல்படுத்தியிருந்தால், வறட்சியில் இருந்து விவசாயிகளை காப்பாற்றியிருக்கலாம்.

மத்திய அரசு கொடுக்கும் நிதி 100 சதவீதத்தையும் விவசாயிகளுக்கு சென்றடையும் வகையில் தமிழக அரசு விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும்.

சுகாதாரத்துறையினர் ஆரம்ப கட்டத்திலேயே நடவடிக்கை எடுத்திருந்தால், தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பை கட்டுப்படுத்தியிருக்க முடியும்.

ரே‌ஷன் கடைகளில் விற்கப்படும் ஒரு கிலோ சர்க்கரை ரூ.25 ஆக உயர்த்தியுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார். பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் சர்க்கரையின் விலையை உயர்த்தியது ஏற்புடையதல்ல. மத்திய அரசு அத்தியாவசிய பொருட்கள் விலை குறைய ஜி.எஸ்.டி. வரி கொண்டு வந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News