செய்திகள்

கொருக்குப்பேட்டையில் வீடுகளுக்குள் கழிவுநீர் புகுந்ததால் பொதுமக்கள் மறியல்

Published On 2017-10-30 07:20 GMT   |   Update On 2017-10-30 07:20 GMT
கொருக்குப்பேட்டையில் வீடுகளுக்குள் கழிவுநீர் புகுந்ததால் பொதுமக்கள் நெடுஞ்சாலையில் திடீரென்று மறியலில் ஈடுபட்டனர்.

ராயபுரம்:

கொருக்குப்பேட்டை, கோவிந்தசாமி நகர், எம்.ஜி.ஆர்.தெரு, ஜெ.ஜெ.நகர் ஆகிய பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள்.

இப்பகுதியில் சாலையில் கழிவு நீர் தேங்கி வீடுகளுக்குள் புகுந்ததால் பொது மக்கள் கடும் அவதி அடைந்தனர்.

இது குறித்து அதிகாரிகளுக்கு பலமுறை தகவல் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசியதால் கடும் பாதிப்புக்குள்ளான அப்பகுதி மக்கள் 50-க்கும் மேற்பட்டோர் இன்று காலை கத்திவாக்கம் நெடுஞ்சாலையில் திடீரென்று மறியலில் ஈடுபட்டனர்.

காலையில் மழை பெய்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருந்த நிலையில் மறியலால் மேலும் பாதிப்பு ஏற்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்ததும் ஆர்.கே.நகர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பொது மக்களிடம் சமாதான பேச்சு நடத்தினார்கள். ஆனால் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

கழிவு நீரை அகற்ற அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கபடும் என்று போலீசார் உறுதி அளித்ததையடுத்து பொது மக்கள் மறியலை கைவிட்டு கலைந்தனர்.

Tags:    

Similar News