செய்திகள்

ஈரோடு: டெங்கு காய்ச்சலுக்கு மேலும் ஒரு சிறுவன் பலி

Published On 2017-09-28 16:47 IST   |   Update On 2017-09-28 16:47:00 IST
ஈரோடு மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் நோயிக்கு மேலும் ஒரு சிறுவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான்.
ஈரோடு:

தமிழகம் முழுவதும் டெங்கு நோயால் பலர் பாதிக்கப்பட்டு உள்ளனர். பலி எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஈரோடு, சேலம், கோவை ஆகிய மாவட்டங்களில் டெங்கு நோய் பாதிப்பு அதிகரித்துள்ளது.

அதிலும் குறிப்பாக ஈரோடு மாவட்டத்தில் டெங்கு நோயின் தாக்கம் அதிகம் உள்ளது. 25-க்கும் மேற்பட்டவர்கள் டெங்கு மற்றும் மர்ம காய்ச்சலால் உயிரிழந்து உள்ளனர்.

நேற்று முன்தினம் கூட அந்தியூர் அருகே உள்ள நகலூர் அண்ணா நகரை சேர்ந்த வெங்கடேஷ் என்பவரின் 6 வயது மகள் யாழினி டெங்கு நோயால் இறந்தாள்.

ஒரு வாரத்துக்கும் மேல் டெங்குவால் பாதிக்கப்பட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிறுமி யாழினி பரிதாபமாக இறந்தாள்.

இப்போது ஈரோடு மாவட்டத்தில் மேலும் ஒரு பள்ளி சிறுவன் டெங்குவால் பலியாகி உள்ளான். அந்த சிறுவன் பெயர் பரத்(வயது7). ஈரோடு மாவட்டம் அரச்சலூர் அடுத்த கவுண்டப்பையன் காடு பகுதியை சேர்ந்த கோபால கிருஷ்ணனின் மகன்.

பரத் சில்லாங்காட்டு புதூர் அரசு பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த சில நாட்களாக பரத் காய்ச்சலால் அவதிப்பட்டான். ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவனுக்கு டெங்கு பாதிப்பு இருந்தது தெரியவந்தது.

இதையொட்டி சிறுவன் பரத்தை கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரத் பரிதாபமாக இறந்தான்.

பலியான சிறுவன் பரத்தின் அக்கா ரம்யா(10), எழுமாத்தூரில் உள்ள பாட்டி வீட்டில் தங்கி 5-ம் வகுப்பு படித்து வந்தாள். இவருக்கும் கடந்த 2 வாரத்துக்கு முன் கடுமையான காய்ச்சல் அடித்தது.

இவளது தந்தை அவளை திருப்பூர் பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தார். தீவிர சிகிச்சைக்கு பிறகு மாணவி ரம்யா பிழைத்து கொண்டாள். டெங்கு காய்ச்சலால் பலியான சிறுவன் பரத் உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர்.

ஈரோடு மாவட்டத்தில் டெங்குவால் நூற்றுக்கணக்கானோர் தொடர்ந்து பாதிக்கப்பட்டு அரசு, தனியார் ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்ற வருகிறார்கள்.

தொடரும் டெங்கு பலியால் பொது மக்கள் அச்சத்துடன் உள்ளனர். மழையும் தொடர்ந்து பெய்து வருகிறது. ஆகவே டெங்கு கொசுக்களை ஒழிக்கும் பணியில் மாவட்ட நிர்வாகம் முழு தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என பொதுமக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இது குறித்து அவர்கள் கூறும் போது, “முன்பெல்லாம் ஊருக்கு ஊர் வீதிக்கு வீதி வந்த டெங்கு நோயை கட்டுப்படுத்த கொசுக்களை ஒழிக்க கொசு மருந்து அடிப்பார்கள். ஆனால் இப்போது அவ்வளவாக அடிக்கவில்லை. குறிப்பாக கிராம புற பகுதிகளிலும் இந்த பணிகள் நடக்கிறதா?...இல்லையா?. என்று தெரியவில்லை” என்று வேதனையுடன் கூறினர்.

Similar News